பெங்களூரில் தமிழ் பெண் கொடூரமாக சுட்டு கொலை.. கணவர் மீது 495 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாக கணவரை அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் கணவரை கைது செய்துள்ள போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிசம்பர் மாதம் நடைபெற்ற 39 வயது வங்கி மேலாளர் கொலை வழக்கில், அவரது கணவர் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், இந்த படுகொலை அரங்கேறியுள்ளது. மனைவி மீது கொண்ட சந்தேகமே இந்த கொலைக்கான காரணம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
இந்த படுகொலை தொடர்பாக 495 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 24வது ACMM நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாகவும் இது முழுக்க முழுக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்றும் மாகடி சாலை காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளறனர்.
இந்த வழக்கில் ஏழு குற்றவாளிகள், 68 சாட்சிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. தடயவியல் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள், வாக்குமூலங்கள் இதில் இடம்பெறுகின்றன. ஒயிட்ஃபீல்டு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த 40 வயது தொழில்நுட்ப வல்லுநர் செல்வ பாலாமுருகன், டிசம்பர் 23ம் தேதி ராஜராஜேஸ்வரி நகரில் தனது மனைவி புவனேஸ்வரியை (39) நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், இந்த படுகொலை நடந்துள்ளது. பின்னர் அவர் தானாகவே மாகடி சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
என்ன நடந்தது
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனும் புவனேஸ்வரியும் 2011இல் திருமணம் செய்து கொண்டனர். பாலமுருகனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்தால் அங்கு குடியேறினர். இருப்பினும், சில காரணங்களால் புவனேஸ்வரி தனது இரு குழந்தைகளுடன் கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்துள்ளார். புவனேஸ்வரி வங்கியில் ஒன்றில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தார். இதற்கிடையே மனைவியின் நடத்தையில் பாலாமுருகன் சந்தேகம் கொண்டார். இருப்பினும், போலீசார் நடத்திய விசாரணையில் இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த சந்தேகம் காரணமாகவே பாலமுருகன் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.
போலீசார் தகவல்
இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "பாலமுருகன் இந்தக் கொலையை மிக நுட்பமாகத் திட்டமிட்டிருந்தார். கொலை செய்த பின் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்பதே அவரது திட்டம். இதற்காக அவர் ஏற்கனவே காவல் நிலையத்திற்கும் வந்து நோட்டாமிட்டுள்லார். சில மாதங்களுக்கு முன், அவர் தனது கூட்டாளியான அபிமன்யு சிங்குடன் பீஹாருக்குச் சென்று, ஆயுத வியாபாரியிடம் நாட்டுத் துப்பாக்கியை வாங்கினார். மொழி சிக்கல் காரணமாக அபிமன்யு சிங் உதவினார். ஒருவேளை துப்பாக்கி பழுதானால் பயன்படுத்த ஒரு கத்தியையும் அவர் வைத்திருந்தார். ஆரம்பத்தில் கூலிப்படையை அமர்த்தவும் திட்டமிட்டிருந்தார்" என்றார்.
பின்னணி
இந்தச் சம்வவம் தொடர்பாக பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவுகள் 103(1), 61, 190 மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டிற்காக ஆயுதச் சட்டம் பிரிவு 27இன் கீழ் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாமுருகன் முதலில் கூலிப்படையை அமர்த்த முயன்றுள்ளார். இதற்காக, சேலத்தைச் சேர்ந்த குற்றவாளியான மௌலேஷ் குமார் (மௌலி) என்பவரை அணுகினார். மௌலி தனது கூட்டாளி பெரியசாமி மணி (மணிகண்ட்) என்பவரை வைத்து கொலை செய்ய திட்டமிட்டார். ஆனால், குமார் அதிக பணம் கேட்டதால் திட்டம் கைவிடப்பட்டது.
அபிமன்யு சிங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூழலில், குமார், மணி ஆகியோர் மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மூவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். நாட்டு துப்பாக்கியை வாங்க உதவிய ராகுல், ஹரி, சூர்யா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications