அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வர ஐடியா கொடுத்தவருக்கு நன்றி.. சசிகாந்த் செந்தில் சொல்றத பாருங்க!
பெங்களூர் : "அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி, அவரால் காங்கிரஸுக்கு 10-20 சீட்கள் கூடுதலாக கிடைத்துள்ளன" என கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் ஒரே தென்மாநிலம் என்பதால் கர்நாடகா ரிசல்ட் தேசிய அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

மேலும், கர்நாடகாவில் பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் செயல்பட்டார். அதேநேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளாக உள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் வார் ரூம் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று, பாஜக ஆட்சியை இழந்துள்ளது. அண்ணாமலையிடம் பொறுப்பு கொடுத்ததால்தான் இந்த படுதோல்வி என்று பலரும் தற்போது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்படும் சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் வார் ரூம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அங்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது கவனிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சசிகாந்த் செந்திலின் வியூகங்கள் பெரிய அளவில் காங்கிரஸுக்கு கைகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேகமாகவும், விவேகமாகவும் செயல்படக்கூடிய சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத பகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரத்தை ஒருங்கிணைத்து நடத்தி, அங்கு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளார்.
மேலும், கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் 'பே-சிஎம்' என்ற க்யூ ஆர் கோடு போஸ்டர்களை மாநிலம் முழுவதும் ஒட்டுவதற்கான ஐடியாவை சசிகாந்த் செந்தில் கொடுத்து, அதை செயல்படுத்தினார். அந்த போஸ்டரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், பாஜவினர் செய்த ஊழல், 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு என்று அனைத்து விவரங்களும் செல்போனுக்கு வந்து விடும்படி செய்தார். இந்த பிரசாரம் பெரிய அளவில் காங்கிரஸுக்கு கை கொடுத்தது.
கர்நாடகாவில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 அதிகாரிகளுக்கு, இரு முக்கிய கட்சிகளும் தேர்தல் பொறுப்பு கொடுத்த நிலையில், அதில் அண்ணாமலை அடிசறுக்கி விழுந்துள்ள நிலையில், சசிகாந்த் செந்தில் சாதித்து காட்டியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கர்நாடகா தேர்தல் வார் ரூம் பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாகவே அமைந்துள்ளது. அவர் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10-20 சீட்டுகள் கிடைத்துள்ளன.
ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி கர்நாடகாவில் பாஜகவை அழிக்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டார். அண்ணாமலை மூலம் நிறைய மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டனர். அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications