ரெண்டு மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளயேவா? கர்நாடக காங்கிரசில் புகைச்சல்! டெல்லியில் முக்கிய மீட்டிங்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது அம்மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கிடையே பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில் இதற்கு முடிவு காண ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி டெல்லியில் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் இரண்டு கூட்டங்களை நடத்த முதலமைச்சர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனால், சில எம்எல்ஏக்கள் பாஜக வசம் தாவிய காரணத்தால் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக சீட்டுகளை ஜெயித்து காங்கிரஸ் தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. இப்படியாக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கிடையே தற்போது புகைச்சல் உருவாகியுள்ளது.

அதாவது அமைச்சர்கள் தங்களிடம் எது குறித்தும் ஆலோசிக்காமல் சுயமாக முடிவெடுத்து அப்பணியை தங்கள் தலையில் கட்டுவதாகவும், அதேபோல சில அமைச்சர்களை அணுகவே முடியவில்லை என்றும் மூத்த எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் சித்தராமையா தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த மோதல் உச்சத்தை எட்டியது. கூட்டத்தில் பேசிய கல்புர்கி மாவட்டத்தின் எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல், "அமைச்சர்கள் எங்களை மதிக்க வேண்டும். எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அப்படி மதிப்பு இல்லையெனில் இந்த எம்எல்ஏ பதவியே வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
இவருக்கு ஆதரவாக யஷ்வந்த் ராயகவுடா, பசவராஜ் ராயரெட்டி, வினய் குல்கர்னி, சிஎஸ் நாடகவுடா, ஹமானபனகவுடா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடி உயர்த்தவே தலைமை சற்று கலக்கமடைந்திருக்கிறது. முன்னதாக இது குறித்து பாட்டீல் உள்ளிட்ட 30 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு கட்சி மாநில தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதம், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இப்படி பேசப்பட்டது இவற்றையெல்லாம் கூட்டி கழித்த பார்த்தால் எங்கோ இடிக்கிறது, நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த தலைமை டெல்லியில் இரண்டு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ஒரு கூட்டம் கர்நாடக மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடத்தப்பட இருக்கிறது. மற்றொரு கூட்டம் அமைச்சர்களுடன் நடக்கிறது. இதில் அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கவும், மேலெழும் அதிருப்தியை சமாளித்து தீர்வு காணவும் ஓர் குழுவும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல எம்எல்ஏக்களை அணுகுவதில் மாற்றம் வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், "எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். எனவே முன்கூட்டியே நாங்கள் இதை தீர்க்க தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். கட்சி தலைமையும் நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications