ரயிலில் ஓசி பயணம்.. டிடிஆரிடம் வசமாக சிக்கிய இளைஞர்கள்.. ஒருமாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி
பெங்களூர்: ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 5 இளைஞர்களுக்கு தலா ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சாலை போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பயணமே சிறந்தது என பலரும் விருப்பப்படுவது உண்டு.
ரயில் பயணம் போக்குவரத்து நெரிசல் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விடும் என்பதால் பலரின் விருப்பமாக ரயில் பயணம் இருக்கும்.

டிக்கெட் இன்றி பயணம்
இதில் சிலர் ரயிலில் பயணிக்கும் போது முறையாக டிக்கெட் எடுத்துக்கொள்ளாமல் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொள்வதும்.. அதற்கு அவர் அபராதம் விதிப்பதும் வழக்கம் தான்.. ஆனால் பெங்களூரில் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்ட 5 இளைஞர்களுக்கு கோர்ட்டு தலா ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர்கள்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து மட்கானுக்கு டிக்கெட் எடுக்காமல் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் பயணம் செய்துள்ளனர். பொதுப்பெட்டியில் 5 இளைஞர்களும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் உடுப்பி அருகே வந்த போது, டிக்கெட் பரிசோதகர் ஒவ்வொரு பயணியிடமும் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதனை செய்துள்ளார்.

இளைஞர்களிடம் விசாரணை
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த 5 இளைஞர்களிடமும் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை கேட்ட போது, அலட்சியமாகவும் இடையூறு செய்யும் வகையிலும் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து உடுப்பி ரெயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் 5 பேர் மீது ரயில்வே போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

தலா ஒரு மாதம் சிறை
அப்போது ரயில்வே போலீசாரிடமும் இளைஞர்கள் ரகளை செய்ததாகவும் இழிவான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், இடையூறு செய்ததற்காக ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications