சசிகலாவை சந்திக்க விண்ணப்பித்த 2 முன்னாள் அமைச்சர்கள்.. வெளிவரும் முன்னே பார்க்க பலர் ஆர்வம்
பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அனுமதி கேட்டு சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்பத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். சசிகலாவின் வருகை தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று முதல்வர் அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தாலும், சசிகலா வருகைக்கு பின் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதை எவராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது.
பெங்களூரு சிறை
இந்நிலையில் சசிகலாவை விடுதலைக்கு முன்பே சிறையில் சந்தித்து பேச வேண்டும் என்று அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்கள். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்கள்.
ஜன.27ல் விடுதலை
அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார்கள். சசிகலா மட்டும் வரும் 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறை துறை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இளவரசி பிப்ரவரி 5ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. சுதகாரன் விடுதலையாகும் நாள் குறித்து தெரியவரவில்லை.
ஆதரவாளர்கள் விருப்பம்
இந்நிலையில் சசிகலா விடுதலைக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால், அவரை விடுதலைக்கு முன் சிறையில் சந்தித்து பேசிவிட வேண்டும் என்பதில் அவரது வக்கீல்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்
சசிகலாவை சந்திக்க விருப்பம்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் சசிகலாவை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள். விண்ணப்பம் கொடுத்துள்ளவர்களில் தமிழக முன்னாள் அமைச்சர்கள் இருவரின் பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களின் கோரிக்கையை சிறை நிர்வாகம் ஏற்குமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரியுமாம்.