டி.கே. சிவகுமாரை தலைவராக்கி ஒக்கலிகா வாக்குகளை மொத்தமாக தட்டி தூக்கும் காங்... உருப்படியான வியூகம்
பெங்களூரு: கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக டி.கே.சிவகுமாரை நியமித்து ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக வளைக்கும் உருப்படியான வியூகத்தை அரங்கேற்றி இருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
நாடாண்ட காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.. நாளும் ஒவ்வொரு மாநிலத்திலும் குழப்பத்தினால் கொத்து கொத்தாக கட்சி மாறும் காங்கிரசார் எண்ணிக்கைதான் அதிகம்.
திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியுமே பாஜகவாக மாறியது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டி போட்டுக் கொண்டு பாஜகவாக உருமாறினர் காங்கிரசார். எஞ்சிய மாநிலங்களிலும் யார் பெரியவர் என்கிற கோதாவில் சிந்தியாக்களை கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்.
அமித் ஷாவை ஆட்டம் காண வைத்த தலைவர்.. கர்நாடக மாநில காங். தலைவரானார் டி.கே சிவக்குமார்.. அதிரடி!
இலவு காத்த கிளியாக பாஜக
மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானா? குஜராத்தா? என எலிப்பொறியை வைத்துக் கொண்டு இருப்பது போல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்காக இலவு காத்துக் கொண்டிருக்கிறது பாஜக. ஏற்கனவே கர்நாடகாவில் ஆடிய ஆட்டத்தின் அடிப்படையில்தான் பிற மாநிலங்களிலும் பாஜக இப்படி வேட்டையாடுகிறது. ஆனால் தடுக்க வேண்டிய காங்கிரஸோ மோட்டு வளையை பார்த்துக் கொண்டே இருக்கிறது.
கர்நாடகா காங். தலைவர்
இப்படியே போனால் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கு கூட கேரளாவையோ தமிழகத்தையோ மட்டுமே காங்கிரஸ் நம்பியிருக்கும் பரிதாப நிலைதான் உருவாகும் என்கிற விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் மேலிடம் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. பாஜகவின் வலைவிரிப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிக்கினால் அவர்களை மீட்கும் பாதுகாவலராக களத்தில் நிற்கும் கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமித்திருக்கிறது.
வீதிக்கு வந்த ஒக்கலிகா சமூகம்
பாஜகவால் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது மும்பையில் எம்.எல்.ஏ.க்களை மீட்க பெரும் போராட்டத்தை நடத்தியவர். இதனாலேயே மத்திய பாஜக அரசால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சிவகுமார். அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பாய்ந்தது. இதனால் கொதித்துப் போன அவர் சார்ந்த ஒக்கலிகா சமூகத்தினர் பெங்களூரின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக பிரமாண்ட பேரணியை நடத்தி அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தினர். இப்போதும் கூட மத்திய பிரதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மீட்பதில் சிவகுமார் படுபிஸி.
உருப்படியான வியூகம்
கர்நாடகாவைப் பொறுத்தவரை ஒக்கலிகா, லிங்காயத் ஜாதிகளின் வாக்குகள்தான் முதன்மை. ஒக்கலிகாக்கள். ஜேடிஎஸ் கட்சியின் வாக்காளர்களாக இருந்து வந்தனர். ஆனால் ஜேடிஎஸ்ஸை விட காங்கிரஸ்தான் பெஸ்ட் என அச்சமூகம் தீர்மானித்திருக்கிற சூழலில் சிவகுமாரை மாநில காங்கிரஸ் தலைவராக்கி இருக்கின்றனர். இதன் மூலம் ஒக்கலிகா சமூக வாக்குகளை தக்க வைத்துக் கொள்ளும் வியூகத்தை வலிமையாக்கி இருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
இது ஒன்னுதான் உருப்படியானது!