தமிழகத்திற்கு கூடுதலாகவே காவிரி நீரை கொடுத்து இருக்கோம்.. டிகே சிவக்குமார் சொல்றதை பார்த்தீங்களா
பெங்களூர்: தமிழகத்திற்கு கூடுதலாகவே காவிரி நீரை கொடுத்து இருக்கோம் என்றும், கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தெரியும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழ்நாடு - கர்நாடக இடையே அவ்வப்போது பிரச்சினை எழுந்து வந்தது. இதனால், தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துடன் காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றன. இந்த நிலையில், போதிய மழை இல்லை என்பதை காரணம் கூறி கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது. இதனால், கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் உரிய நீரை திறந்து விட வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது , தண்ணீர் வழங்குவதில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் மற்றும் அணைகளின் தற்போதைய நீர் இருப்பு விவரங்களை செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக கோரிக்கை தொடர்பாக விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என
காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தலாம் என ஒழுங்காற்றுக்குழு முடிவு செய்தது. இந்த முடிவு, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாகவே காவிரி நீரை தந்துள்ளோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிகேசிவக்குமார் மேலும் கூறுகையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகவே காவிரி நீரை தமிழகம் பயன்படுத்தியிருக்கிறது என்றும் கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தெரியும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது பயிரிடுவதை தமிழகம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்" என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications