கணவர் தற்கொலை செய்த 6 நாட்களில் உயிரை மாய்த்த காவலர் மனைவி! கடிதம் சிக்கியது! யார் அந்த மோகன்?
பெங்களூர்: கர்நாடக மாநிலம், பத்ராவதி தாலுகாவின் ஹோசா சித்தப்பூர் கிராமத்தில் கணவர் இறந்த 6 நாட்கள் கழித்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான கடிதமும் சிக்கியது.
கர்நாடக மாநில ரிசர்வ் காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஜெகதீஷ். இவர் பிப்ரவரி 14 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ஸ்வாதி, கணவர் இறந்த ஆறே நாட்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மேலும் சோகத்தை அதிகப்படுத்தியது.

ஜெகதீஷ் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாக தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாயுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பலமுறை தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய அவர், கடைசியாக தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் குடும்பத்தினர் கூறினர்.
கணவரின் இழப்பால் ஸ்வாதி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்த காவலர் மோகன் என்பவர் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் ஸ்வாதிக்கு அநாகரீகமான ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சமூகவலைதளங்களில் மோகனை ஸ்வாதி பிளாக் செய்துவிட்டாராம். இந்த ஆத்திரத்தில் மோகன், தொடர்ந்து ஜெகதீஷ் இறப்பிற்கு காரணம் ஸ்வாதிதான் என அவதூறு பரப்பியும் வந்தாராம். மேலும் பாலியல் தொல்லையையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து ஸ்வாதி தனது தாய் பாக்கியம்மாவிடம் கூறினார். கணவரின் 13ஆம் நாள் சடங்குகள் முடிந்ததும் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று பாக்கியம்மா அவருக்கு அறிவுறுத்தியிருந்தாராம்.
இருப்பினும், பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று, ஸ்வாதி தனது தாயாருக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பினார். அதில் தான் சந்தித்து வந்த மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தனது சாவுக்கு மோகன்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளாராம். இந்த மெசேஜ் அனுப்பிய சில நிமிடங்களிலேயே, ஸ்வாதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்வாதியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பத்ராவதி புதிய நகரக் காவல்துறையினர் காவலர் மோகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல், அவதூறு செய்தல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட மோகன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஸ்வாதி பத்ராவதி தாலுக்காவில் உள்ள கோனிபிடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெகதீஷ், சிமோகாவில் ரிசர்வ் படை காவலராக பணியாற்றி வந்தாராம். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனராம்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வல்ல. தற்கொலை தடுக்கப்பட வேண்டிய ஒன்றே. தற்கொலை எண்ணம் வந்தால் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications