புதிய 200 ரூபாய் நோட்டு... ஏடிஎம்மில் கிடைக்க 90 நாளாகுமாம்!
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம்மில் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: அனைத்து வங்கிக் கிளைகளிலும் 200 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துவரும் சூழுலில் வங்கி ஏடிஎம்களில் 200 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கம் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய வடிவில் 500 ரூபாய் நோட்டுக்களும் முதன்முறையாக 2000 ரூபாய் நோட்டுக்களும் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன.
தற்போது புதிய 50 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. உலகில் முதன் முறையாக 200 என்ற எண்ணிக்கையில் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிடுவது இந்தியா என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
சில்லறை தட்டுப்பாடு
இருந்தாலும், குறைந்த மதிப்புடைய 10 ரூபாய் முதல் 100 ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களின் இந்த சிரமங்களை களையும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி குறைந்த மதிப்புடைய 50 முதல் 100 ரூபாய் நோட்டுக்களை விரைவில் அச்சிட்டு புழக்கத்திற்கு விடும் என்று தெரிவித்தது.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக
இந்திய நாணயவியல் வரலாற்றிலேயே முதன்முறையாக 200 ரூபாயும் அச்சிட்டு புழக்கத்திற்க விடப்படும் என்றும் தெரிவித்தது. மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது போலவே கடந்த ஆகஸ்டு மாத கடைசி வாரத்தில் 200 ரூபாயை அச்சிட்டு புழக்கத்திற்கு விட்டது.
பாரம்பரிய கலை பொக்கிஷங்கள்
வழக்கமாக இந்திய ரூபாய் நோட்டுக்களில் முன்புறத்தில் மகாத்மா காந்தியடிகளின் படமும், பின்புறத்தில் பாராளுமன்றத்தின் படமும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், அந்த நடைமுறையை மாற்றி, இந்தியாவின் பண்டைய காலத்து பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை அனைவரும் அறியும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டு வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்தது.
சாஞ்சி ஸ்தூபி
ஆம், புதிய 200 ரூபாய் நோட்டுக்களில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மெளரியப் பேரரசின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் மாமன்னர் அசோகரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபியின் படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ. 200 நோட்டுக்கள்
புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாகவும் இவ்விரண்டு நோட்டுக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கம் என்று மத்திய ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இவை தற்போது மத்திய ரிசர்வ் வங்கியின் மாநில கிளைகளிலும், அனைத்து வங்கிக் கிளைகளிலும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம்மின் உள் கட்டமைப்பு
ஆனால், அதே சமயத்தில் வங்கி ஏடிஎம்களில் 200 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், தற்போது உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் 100, 500 மற்றும் 2000 நோட்டுக்கள் கிடைக்கும் வகையில்தான் ஏடிஎம்மின் உள்கட்டமைப்பும் ஏடிஎம் மென்பொருளும் தயாரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
90 நாட்கள் ஆகும்
புதிதாக 200 ரூபாய் நோட்டுக்களையும் ஏடிஎம்களின் உட்செலுத்தும் வகையில் ஏடிஎம்மின் உள்கட்டமைப்பும் மென்பொருளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை முழுமையாக தயார் ஆவதற்கு சற்று காலதாமதம் ஆவதால் 200 ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு இன்னும் 3 மாதங்களாவது ஆகும் என்று தெரிகிறது.
சோதனை முயற்சி
சில வங்கிகள் ஏடிஎம் தயாரிப்பாளர்களிடம் சோதனை முயற்சியாக, 200 ரூபாய் நோட்டுக்களை உட்செலுத்தும் வகையில் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால், அதே சமயத்தில் ஏடிஎம் தயாரிப்பாளர்களுக்கு இன்னும் புதிய 200 ரூபாய் நோட்டின் மாதிரி (Specimen) கிடைக்கவில்லை என்று தெரிகிறது. ஆயினும், இந்த தகவலை இன்னும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை.
காத்திருங்கள் மக்களே
முன்னதாக, கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் 200 ரூபாய் நோட்டுக்கள் அனைத்து ஏடிஎம்களிலும் கிடைக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. ஆனால், ஏடிஎம்கள் 200 நோட்டுக்களை உட்செலுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதால் மேலும் மூன்று மாத காலம் ஆகும் என்று தெரிகிறது.
வங்கிகளில் கிடைக்கும்
இதுபற்றி மத்திய ரிசர்வ் வங்கி தரப்பில் கூறும்போது, புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் அச்சடிக்கப்பட்டு அனைத்து வங்கிகளின் கிளைகளுக்கும் அனுப்பட்டுவிட்டன. மேலும் 200 ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தேவையான அளவில் கிடைக்கும் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.