எவ்வளவு உயர போனாலும்.. பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ தான்.. அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: பிட்காயின் மதிப்பு இப்போது எங்கோ உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் பலரும் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் பிட்காயின் குறித்து சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். பிட்காயின் ஏன் சிக்கலானது என்பதை அவர் எளிதாக விளக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது முதலே பிட்காயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் ரூ. 60 லட்சமாக இருந்த நிலையில், இப்போது அது ரூ.82 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது வரும் காலங்களிலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இதில் உள்ள சிக்கல்களை விளக்குகிறார்.
பிட்காயின்: அதாவது அவர், "இன்றும் சொல்கிறேன். பிட்காயினுக்கு சுத்தமாக மதிப்பு இல்லை. அது மதிப்பற்ற ஒன்று.. டிரம்ப் ஏதோ செய்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பிட்காயின் மதிப்பை ஏற்றியுள்ளனர். எலான் மஸ்க் கூட டோஜ்காயினை வைத்து ஏதோ செய்து கொண்டு இருக்கிறார். எங்குப் போனாலும் பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ தான். இது குறைந்தது 10 ஆண்டுகள் பார்க்கும் கேம்.
ஜீரோ தான்: இதற்கான காரணத்தையும் சொல்கிறேன் கேளுங்கள். இது உண்மையாக மதிப்பு உடைய ஒன்று என்றால்.. கிரிப்டோகரன்சி ஒரு பக்கம் நகர வேண்டும். டாலர் மதிப்பு ஒரு பக்கம் போக வேண்டும்.. உதாரணத்திற்குப் பாருங்கள்.. டாலர் மதிப்பு ஏறும் போது தங்கம் விலை குறைகிறது. க்ரிப்டோ ஒரு பக்காவான கரன்சி என்றால்.. டாலர் மதிப்பு ஏறும் போது க்ரிப்டோ மதிப்பு குறைய வேண்டும். டாலர் மற்றும் கிரிப்டோ என இரண்டும் ஒரு சேர ஏறுகிறது என்றால் அதில் பிரச்சினை என்று அர்த்தம்.
தங்கம் கூட இதுபோல நடந்ததே என்று கேட்கலாம்.. தங்கம் விலை சரியும் போது உள்ளே வந்து ரஷ்யா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் வாங்கியதாலேயே அப்போது தங்கம், டாலர் என இரண்டும் ஏறியது. இந்தியா கூட வாங்கியிருந்தது" என்றார். இதுபோல சில அரிய சந்தர்ப்பங்களைத் தவிர எப்போதும் டாலர் மதிப்பு ஏறினால் தங்கம் விலை குறையவே செய்யும். ஒரு வேலை டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால், பிட்காயினில் இரண்டும் அதிகரிப்பதால்.. அதற்கு மாற்று இது என்று சொல்ல முடியாது என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்து.
வாரன் பபெட்: இவர் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த முதலீட்டாளராக அறியப்படும் வாரன் பபெட் கூட பிட்காயினை கடுமையாக விமர்சித்தே வந்து இருக்கிறார். அதுவும் இப்போது இல்லை. பல ஆண்டுகளாகவே அவர் பிட்காயினை கடுமையாகச் சாடி வந்துள்ளார். அப்போது அவர், "பிட்காயின் அல்லது கிரிப்டோகரன்சி நீங்கள் வாங்கும் போது உண்மையில் உற்பத்தி செய்த எதுவும் உங்களிடம் இல்லை. சர்வீஸுக்கும் இல்லை.. அடுத்தவர் உங்களிடம் இருந்து அதிகப் பணம் கொடுத்து வாங்குவார் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாங்குகிறார்கள்" என்று இதில் உள்ள அடிப்படை பிழையைச் சுட்டிக்காட்டினார்.
25 டாலர் கூட தேறாது: கடந்த 2022ல் நடந்த பெர்க்ஷயர் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங்கில் இன்னுமே கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். அதாவது, "உலகில் உள்ள அனைத்து பிட்காயின்களையும் $25க்கு எனக்கு வழங்கினாலும் கூட அதை நான் வாங்க மாட்டேன். இங்கு அடிப்படை கேள்வி என்னவென்றால் அதை வைத்து நான் என்ன செய்வேன்? வேறு ஒருவருக்கு விற்க மட்டுமே முடியும். அதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது" என்று மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications