அன்று ₹ 25,000 சம்பளம்.. இன்று ₹ 9 கோடிக்கு அதிபதி.. சீக்ரெட் இதுதானாம்.. உடைத்து பேசிய நெட்டிசன்
சென்னை: எந்தவொரு சொத்தும் இல்லாமல்.. சாதாரண ஐடி வேலையில் சேர்ந்து இன்று பல கோடி ரூபாயைச் சேர்த்து இருக்கிறார் ஒருவர்! ஆண்டுக்கு வெறும் ரூ.3 லட்சம், அதாவது மாதம் வெறும் ரூ.25,000 சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று ரூ.9 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். செல்வத்தை எப்படிச் சேர்த்தார் என்பதை விளக்கி அவர் பதிவிட்டுள்ள நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தக் காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் வருமானம் போதவில்லை.. அதனால் சேமிக்க முடியவில்லை எனப் பலர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இங்கு ஒருவர் மாதம் வெறும் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கி இப்போது ரூ.9 கோடியை சேமித்துள்ளார். அவர் இந்தளவுக்கு எப்படி பணத்தைச் சேமித்தார்.. அவரது சீக்ரெட் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

ரூ.9 கோடிக்கு அதிபதி
இதற்கிடையே 20 ஆண்டுகளில் 9 கோடி ரூபாயை எப்படிச் சேர்ந்தேன் என்பது குறித்த தகவல்களை இந்திய ஐ.டி. ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.. 47 வயதான இவர், ஒரு சாதாரண ஐடி ஊழியராகத் தன்னை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். அவருக்கு எந்தவொரு குடும்பச் சொத்து அல்லது இதர வருமானமோ இல்லையாம். வெறும் தனது ஐடி வேலையை வைத்து அவர் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதித்து இருக்கிறார்.
சீக்ரெட் என்ன!
2005ல் முதலில் ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவரது ஆண்டு சம்பளம் வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே! அந்த இடத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அந்த நபர் இன்று பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கிறார். அவருக்கு வெளிநாட்டு வேலையோ, டாலர் வருமானமோ, பரம்பரைச் சொத்தோ இல்லை. தொடக்கம் முதலே பங்குச் சந்தையில் சீராக முதலீடு செய்து வந்ததால் அந்த நீண்டகால முதலீடுகளே அவரது செல்வம் செழிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. கூட்டு வட்டி எனப்படும் compounding மற்றும் சந்தையில் தொடர்ந்து நீண்ட காலம் முதலீடு செய்தது ஆகியவை தான் இவருக்குக் கை கொடுத்துள்ளது..
பணிக்குச் சேர்ந்த காலத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும், அவர் தனது முதலீடுகளைச் சீராகச் செய்து வந்தார். பெரிய ஆடம்பரமான முதலீடுகளைத் தவிர்த்து, கூட்டு வட்டியின் பவரை நம்பி சிறுகச் சிறுக, அதேநேரம் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்தினார். 2010இல் அவரது ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயாக உயர, முதலீடுகளும் அதே அளவை எட்டின. 2016இல் அவரது ஆண்டு வருமானம் 25 லட்சம் ரூபாயை அடைந்த நிலையில், முதலீடுகள் 1 கோடி ரூபாயைக் கடந்தன. 2020இல் அவர் ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பாதித்தபோது, முதலீடுகள் இரண்டு மடங்காகி 2 கோடி ரூபாயை அடைந்தன.
காம்பவுண்டிங் மேஜிக்
ஆனால், இந்த இடத்தில் தான் காம்பவுண்டிங் மேஜிக் நடந்துள்ளது. அதாவது 2005ல் வேலைக்குச் சேர்ந்த அவருக்குக் கோடி ரூபாயை எட்டக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால், அடுத்த 4 ஆண்டுகளிலேயே 2020ல் அவரது முதலீடு 2 மடங்கு உயர்ந்து ரூ.2 கோடியை எட்டியுள்ளது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து அவரது ஆண்டு வருமானம் 65 லட்சம் ரூபாயை எட்டியுள்ள நிலையில், அவரது நிகரச் சொத்து மதிப்பு 9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவரது முதலீடுகளில் 8 கோடி ரூபாய் இந்தியப் பங்குகளில் இருக்கும் சூழலில், 1 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ளது. இதுபோக சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கிவிட்டாராம்.
சீரான முதலீடு
அவர் பங்குச்சந்தைகளைத் தாண்டி, வெளிநாட்டு வருவாய் அவ்வளவு ஏன் ரியல் எஸ்டேட் முதலீடுகளைக் கூட நம்பியதில்லையாம். ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ததில்லை. அதில் எல்லாம் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, சீரான முதலீட்டை மட்டுமே நம்பி வந்துள்ளார். அதுவே இவ்வளவு பெரிய சொத்தை சேர்க்கக் காரணமாக இருந்துள்ளது. இவரது குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கும் சூழலில், இவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருந்துள்ளார். ஆனாலும், சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து அசாதாரணச் சொத்தை சேர்த்து இருக்கிறார் இவர்.












Click it and Unblock the Notifications