என்னது 3-4 வருடமா.. இந்தியாவின் LPG-க்கு மிகப்பெரிய பிரச்சனை.. உடனடி ஆக்ஷன் தேவை
இந்தியாவின் எரிசக்தி துறையில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகி வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலக அளவில் எல்பிஜி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நெருக்கடி முழுமையாக சரிய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்பது தெரியுமா..?
இது வெறும் எரிபொருள் கிடைக்கும் பிரச்சனை மட்டுமல்ல, கோடிக்கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களின் செலவுகளை அதிகரிக்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஹார்முஸ் - இந்திய சமையலறைகளின் உயிர்நாடி
இந்த நெருக்கடியின் மையப்புள்ளி ஹார்முஸ் நீரிணை. உலகின் முக்கிய எரிசக்தி பாதையான இந்த நீரிணை வழியாகத்தான் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் வந்து கொண்டிருந்தது. தற்போது இந்தப் பாதை தடைபட்டுள்ளதால் இந்தியா தனது விநியோக கூட்டணியை அவசரமாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த எல்பிஜி நுகர்வில் சுமார் 60 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. இந்தச் சூழலில் வளைகுடா பகுதியிலிருந்து வரும் விநியோகம் பெரிய அளவில் குறைந்துள்ளது.
மீட்சிக்கு 3-4 ஆண்டுகள் - நிச்சயமற்ற நிலை
இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்குவது ஈரான் போரால் எரிவாயு உற்பத்தி வசதிகளுக்கு ஏற்பட்ட சேதம். இந்த சேதம் மூலம் பல வாரங்களாக முடக்கிக்கிடக்கும் உற்பத்தி ஆலைகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனை தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், எரிவாயு சப்ளையில் சிறந்த சூழலில் ஏற்பட்டால் கூட இயல்பு நிலைக்கு திரும்ப 3-4 ஆண்டுகள் ஆகலாம். இதற்கிடையில் மாற்று வழிகளைத் தேடினாலும் 50 சதவீதம் வரை விநியோக பற்றாக்குரை நீடிக்கும் அபாயம் உள்ளது என ஏப்ரல் மாதத்திற்கான Rubix Data Sciences மற்றும் Vayana TradeXchange அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு வசதி மிகக் குறைவு
இந்தியாவின் பலவீனம் இங்கே தான் உள்ளது, நாட்டில் உள்ள எல்பிஜி சேமிப்பு வசதி வெறும் 15 நாட்களின் நுகர்வுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. நீண்டகால இடைவெளியை சமாளிக்க இது போதாது. இதன் விளைவாக விலை ஏற்ற இறக்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
சீனா சுமார் 1 பில்லியன் பேரல் அளவுக்கான கச்சா எண்ணெய் சேமிப்பை வைத்துள்ளது. இதன் மூலம் வளைகுடாவில் போர் 1 வருடம் நீடித்தாலும் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் சீனாவால் இயங்க முடியும்
வளைகுடா நாடுகள்
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதில் பன்முகப்படுத்தி வலிமையாக இருந்தாலும், எல்பிஜி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பகுதிகள் தற்போது ஹார்முஸ் நெருக்கடியால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு கப்பல் செலவும், காப்பீட்டுக் கட்டணமும் வேகமாக உயர்ந்துள்ளன.
இது வணிகங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. இதனால் விலையும் அதிகரித்து ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு தொழில்கள் போன்றவற்றின் செலவுகளை அதிகரித்துள்ளது.















Click it and Unblock the Notifications