விடைபெற்றது மாருதி 800 - கார் உற்பத்தியை நிறுத்தியதாக மாருதி சுசூகி அறிவிப்பு
டெல்லி: இந்தியர்களின் கார் கனவை நிறைவு செய்த மாருதி 800 கார்களின் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள போவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே. குறைந்த அளவே வருமானம் இருந்தால் போதும். கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்று கூறினால் அது மிகையாகாது.
எனவே, சிறிய வகை கார் ரசிகர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் இது ஒரு ஏமாற்றமாகவே அமையப்போகிறது.
சுசூகியுடன் இணைந்து
இந்தியர்களுக்கு ஏற்ற வகையிலான சிறிய வகை கார்களை ஜப்பான் நாட்டு சுசூகி நிறுவனத்துடன் இணைந்து மாருதி 800 என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்தது மாருதி நிறுவனம்.
மதிப்பு குறையாத கார்
விற்பனை தொடங்கிய 1980 ஆம் ஆண்டில் அதன் விலை 50ஆயிரமாக இருந்தது. தற்போது இக்கார்களின் விலை ரூபாய் 2.35 லட்சமாக உள்ளது. எத்தனை வகை சிறிய கார்கள் வந்த போதிலும் இதன் மதிப்பு கார் ரசிகர்களிடம் குறையவில்லை.
பத்து வருடத்துக்கு மட்டுமே
இந்நிலையில் இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப்போவதாகவும், இதற்கான உதிரிபாகங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் அதன் நிர்வாக இயக்குனர் சி.வி.இராமன் தெரிவித்துள்ளார்.
13 நகரங்களில் நிறுத்தம்
மேலும், ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர்,புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும்.
ஆல்டோ, வேகன் ஆர்
தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின்மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கவும் விற்பனையை அதிகமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வளர்ச்சி இருக்கிறது
தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை மாருதி 800 கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல் 4 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார்.
குட்டிக் கார்களுக்கு முன்னோடி
தற்போது உள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10,ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800.