சென்ச்சுரி அடித்த வெங்காய விலை: கிளீன் போல்டான மக்கள்
டெல்லி: பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த வெங்காயத்தின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது மக்களின் கண்களில் ரத்தக் கண்ணீரையே வரவழைக்கின்றது.
தங்கத்தின் விலை தான் நாளுக்கு நாள் அதிகரித்து அதிர்ச்சி அளிக்கின்றது என்றால் வெங்காயத்தின் விலையும் அவ்வப்போது உயர்ந்து நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரத்தக் கண்ணீர்
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளதால் டெல்லி மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். பிற மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கலங்கிப் போயுள்ளனர்.
சென்னை, பெங்களூர்
டெல்லியுடன் ஒப்பிடுகையில் சென்னை மற்றும் பெங்களூரில் வெங்காய விலை பரவாயில்லை. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 55க்கும், பெங்களூரில் ரூ.60க்கும் விற்பனையாகிறது.
பண்டிகை சீசன்
தீபாவளி நெருங்கும் வேளையில் வெங்காய விலை அதிகரித்துள்ளது மக்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. நல்லாத்தான் பண்டிகை காலமா பார்த்து வெங்காய விலை அதிகரித்துவிட்டது என்று ஏழை, எளிய மக்கள் புலம்புகிறார்கள்.
கடைக்குள்
பெங்களூரில் உள்ள சில கடைகளில் இத்தனை நாட்களாக வெளியே வைக்கப்பட்டிருந்த வெங்காய கூடை நேற்று முதல் கடைக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று கேட்டால் வெங்காய விலை அதிகம் அதனால் தான் பத்திரமாக கடைக்குள் வைத்து வியாபாரம் செய்கிறோம் என்கிறார்கள் கடைக்காரர்கள்.
சென்னைவாசிகள்
பிற மாநில மக்கள் எல்லாம் வெங்காய விலையை நினைத்து கண்ணீர் வடிக்கையில் சென்னைவாசிகள் மட்டும் குஷியாக உள்ளனர். காரணம் கேட்டால் எங்கள் அம்மா மலிவு விலை கடையில் வெங்காயம் மலிவான விலையில் கிடைக்கிறது என்கிறார்கள். அடடே...