நாட்டில் பணப்பஞ்சம் தீர்ந்து விட்டது - சொல்கிறார் அருண் ஜெட்லி.
நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் பணப்புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: ரிசர்வ் வங்கியின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தின் 11வது ஆண்டு விழாவில் பேசிய அருண் ஜெட்லி,நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் பணப்புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்று ஆறுதல் செய்தி கூறியுள்ளார்.
உயர்மதிப்பு உடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று அறிவித்தார். அது முதல் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 500 ரூபாய் நோட்டுக்களும் புதியதாக புழக்கத்திற்கு வந்துள்ளன.
வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னர், இந்த கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு நாளைக்கு 10000 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடு தளர்வு
இந்த கட்டுப்பாடு ஓரளவு தளர்த்தப்பட்டு, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல், வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கான அளவினை 24000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது.
பணம் எடுக்கும் உச்ச வரம்பு
சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 24000 ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளாம் என்றும் வருகிற மார்ச் 13ஆம் தேதிக்குப் பின்னர் பணம் எடுப்பதற்கான உச்ச பட்ச வரம்பினை அந்த அந்த வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
2000 ரூபாய் நோட்டுக்கள்
தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம் வாசல்களில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.இருந்தபோதிலும், பெரும்பாலான ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுக்களே இருப்பு உள்ளதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே திரும்பிச் செல்கின்றனர்.
கட்டுப்பாடுகள் தளர்வு
டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் காலியாகவே உள்ளன. ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகி விட்டன. பல ஏடிஎம்கள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. இப்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பணம் இருப்பு
இந்த நிலையில் அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எடுத்துக்கொள்ளும் அளவிற்கு போதுமான அளவில் பணம் இருப்பு உள்ளதாகவும், இருந்தபோதும், ஏ.டி.எம்.கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஏடிஎம்களில் பணம் இருப்பு
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி,"நிதி சேவைத் துறையானது, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் முறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்து விபரங்களை சேகரித்து வருகின்றது. இருந்தாலும், தற்போது அனைத்து ஏ.டி.எம்.களிலும் வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான அளவிற்கும் அதிகமான பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பணப்புழக்கம் அதிகரிப்பு
இதனிடையே இன்று ரிசர்வ் வங்கியின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தின் 11வது ஆண்டு விழாவில் பேசிய அருண் ஜெட்லி,நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் பணப்புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இதற்குக் காரணம், ரிசர்வ் வங்கியின் பணம் அச்சடிக்கும் நிறுவனமே என்று கூறியுள்ளார்.
கடின உழைப்பு
அவர்களின் இடைவிடாத கடின உழைப்பால் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் பணம் சென்றுசேர்ந்துள்ளது. இதன்மூலம் கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழித்துள்ளோம். பணப்புழக்கம் சரியாக 7 மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் சில வாரங்களிலேயே நிகழ்த்திக்காட்டியுள்ளோம் என்றார்.
24 மணி நேரம் பணம் அச்சடிப்பு
ரிசர்வ் வங்கிக்காக பணம் அச்சடிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் உழைத்துள்ளனர். இதனால்தான் நாட்டில் பணப்புழக்கம் சீரானது. இதற்கு முழுக்காரணம் அச்சு நிறுவனங்களே ஆகும் என்று கூறினார். உயர்பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் 15.45 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.