ரூ500 கோடிக்கு அதிகமாக கடன் செலுத்தாதோர் பட்டியல்- ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ரூ500 கோடிக்கு அதிகமாக வங்கிக் கடன் செலுத்தாதோர் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடனை திருப்பி செலுத்தாதவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டது ரிசர்வ் வங்கி. இது வெளியிடப்பட்டால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்றும் விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் ஒரு பக்கம் மக்கள் ஆயிரம் கோடி கணக்கில் கடனை வாங்கிவிட்டு மன்னர்கள் போன்று வாழ்கின்றனர், பின்னர் நொடிந்து போனதாக அறிவிக்கின்றனர்... மற்றொரு புறம் விவசாயிகள் சில ஆயிரக் கணக்கில் கடன் வாங்குகின்றனர். அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றால் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுகிறது என கவலை தெரிவித்தனர்.
மேலும் ரூ. 500 கோடிக்கு அதிகமாக வங்கிகடன் செலுத்தாத நிறுவனங்களின் தகவல்களை தெரிவிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெருநிறுவன கடன் மறுசீரமைப்பு திட்டம் மூலம் எந்த நிறுவனங்களின் கடன்கள் சீரமைக்கப்பட்டது என்பதையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
இந்த தகவல்களை சமர்பிக்க மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் 6 வாரகாலம் அவசாகம் கொடுத்து உள்ளது. பெரும் கடனாளிகளிடம் இருந்து கடன் தொகையை திரும்ப பெறுவதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதில் உச்சநீதிமன்றம் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளது.