சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய ''பிட்புல் நாய்''.. ஆஸ்பத்திரியில் அட்மிட்.. என்னாச்சு!
சண்டிகர்: அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பிட் புல் வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த முன்னி என்ற பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாய் இனங்களில் மிகவும் கொடூரமாக கருதப்படுவது பிட்புல் வகையை சேர்ந்த நாயேயாகும். இந்த நாய்கள் வீட்டுக்கு வரும் வெளியாட்களை கடித்து தாக்குவதுடன் சில நேரங்களில் வீட்டு எஜமானர்களையும் கடித்து விடுகிறது.
இதன் காரணமாகவும், இந்த நாய்கள் கடித்தால் மரணமும் ஏற்படும் என்பதால், இந்த நாயை வளர்க்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பார்ப்பதற்கு ஆக்ரோசமாக, கட்டுமஸ்தாக இருப்பதால் இந்த நாயை பலரும் வளர்க்க விரும்புகின்றனர்.

பிட்புல் நாய்
குருகிராம் சிவில் லைன் பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் பெண் முன்னி. 30 வயதான இவர் வழக்கம் போல் தனது பணிகளை முடித்து விட்டு அங்குள்ள ஹவுசிங் சொசைட்டி அருகே உள்ள தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பிட் புல் நாயுடன் வினித் சைக்ரா என்ற நபர் வாக்கிங் வந்து கொண்டிருந்தார். தனது கையில் வைத்திருந்த ரோப் ஒன்றில் கட்டி வைத்தபடி வினித் சைக்ரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வினித் சைக்ரா பிடியில் இருந்து ரோப் நழுவியது.

முன்னியை தாக்கிய நாய்
உடனே, விடுபட்ட நாய் வேகமாக ஓடிச்சென்று அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முன்னியை பார்த்து முறைத்தது. இதில் முன்னி அஞ்சி நடுங்கினார். நொடிப்பொழுதில் அவர் மீது பாய்ந்த நாய் முன்னியை தாக்க தொடங்கியது. இதில் அலறியடித்தபடி கீழே விழுந்தார் முன்னி. ஆனாலும் விடாத நாய் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக தாக்கியது. இதைக்கவனித்த அவ்வழியாக சென்றவர்கள், முன்னியை நாயிடம் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் முன்னி சிகிச்சை பெற்று வருகிறார். முன்னியின் உறவினர் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, பிட்புல் நாயின் உரிமையாளர் வினித் சைக்ரா மீது தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பிட்புல் நாய் கடிதத்தில் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசத்தில் பெண் உயிரிழப்பு
முன்னதாக கடந்த ஜூலை மாதம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை சுஷிலா திரிபாதி, தனது வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தனது மகனுடன் வசித்து வந்த மூதாட்டி சுஷிலாவை, மகன் வெளியே சென்றிருந்த சமயத்தில் வீட்டிலேயே செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் கொடூரமாக கடித்தது. இதில், அவரது அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டினர் சுஷிலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications