"டீ சர்ட்டை கிழித்து.." பெண் பயிற்சியாளரிடம் பாலியல் அத்துமீறல்.. பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
சண்டிகர்: ஹரியானா பாஜக விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் சந்தீப் சிங். இவர் அங்குப் பெண் பயிற்சியாளர் ஒருவரிடம் அத்துமீறி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த பயிற்சியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இப்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். அங்கு விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் சந்தீப் சிங்.
முன்னாள் ஹாக்கி வீரரான இவர், ஒரு கட்டத்தில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டானகவும் இருந்துள்ளார். இவர் மீது தான் பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெண் பயிற்சியாளர்
அங்கு ஜூனியர் வீரர்களுக்குத் தடகள பயிற்சி அளித்து வரும் பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியானா விளையாட்டு அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் இன்று பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், அமைச்சர் சந்தீப் சிங் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்திருந்தார். மேலும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கோரிக்கை
அந்த பெண் எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தன்னுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சந்தீப் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனோகர் லால் கட்டார் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெசேஞ் செய்தார்
பெண் பயிற்சியாளர் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து மேலும் கூறுகையில், "முன்னாள் ஹாக்கி கேப்டனான சந்தீப் சிங் என்னை முதலில் ஜிம்மில் பார்த்தார். அதன் பின்னர் எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினார். என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். ஒரு நாள் திடீரென அவர் எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஞ் அனுப்பினார். எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாகச் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, எனது சான்றிதழ்கள் மிஸ்ஸாகி இருந்தது.
என்ன நடந்தது
இது தொடர்பாக நான் ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருந்தேன். இருப்பினும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. இது தொடர்பாக என்னிடம் இருந்த வேறு சில ஆவணங்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். இதனால் அவர் சந்திக்க நான் ஒப்புக் கொண்டேன். இதற்காக நான் அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்குச் சென்றபோது அவர் என்னிடம் அத்துமீறினார். அமைச்சர் பாலியல் ரீதியாக என்னிடம் அத்துமீறினார். நான் அங்குச் சென்றதும் ஒரு பக்கம் இருக்கும் கேபினுக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார்.. அவர் எனது ஆவணங்களை வாங்கி மேஜையில் போட்டார்.
டீ சர்ட்டை கிழித்தார்
அதன் பிறகு என் காலில் அவர் கை வைத்தார். என்னைப் பார்த்தவுடன் பிடித்துப் போனதாக அவர் தெரிவித்தார். அப்போது என்னைப் பார்த்து.. நீ என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்.. நானும் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்றார்.. இதனால் அச்சமடைந்த நான் அவரது கையை தட்டிவிட்டேன். இருப்பினும், தொடர்ந்து என்னிடம் அத்துமீறினார். ஒருகட்டத்தில் அவர் என் டி-ஷர்ட்டைக் கிழித்துவிட்டார். எனக்கு அச்சத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் அழத் தொடங்கினேன். யாராவது உதவுங்கள் என்று கூறி கத்த தொடங்கினேன்.
புகார்
அங்கு அவரது அனைத்து ஊழியர்களும் இருந்தார்கள்.. இருப்பினும், யாருமே எனக்கு உதவவில்லை. இது தொடர்பாக நான் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்றும் சண்டிகர் காவல்துறை எனது புகாரை முறையாக விசாரிப்பார்கள் என்றும் நம்புகிறேன்" என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தீப் சிங் மீது 354, 354ஏ, 342 என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தீப் சிங் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார்.
மறுப்பு
இது தொடர்பாக அவர் பேசுகையில், "இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு குற்றச்சாட்டு.. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கும் நான் தயாராகவே உள்ளேன். எனது இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற புகாரைத் திட்டமிட்டுக் கொடுத்துள்ளனர். அந்தப் பெண்ணின் முழு வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கவனிக்க வேண்டும். அப்போது தான் அவர் ஏன் இதுபோன்ற ஒரு புகாரை அளித்தார் என்பது தெரிய வரும்" என்றார்.
சந்தீப் சிங்
சந்தீப் சிங், குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவாவில் இருந்து பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர். ஹாக்கி வீரரான இவர் இந்தியத் தேசிய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 'சூர்மா' என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் 2018 இல் வெளியிடப்பட்டது. இவர் பல்வேறு டிவிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். அவருக்கு 20 வயதாக இருந்த போது, 2007ஆம் ஆண்டு ரயில்வே போலீஸ் படையின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எதிர்பாராத விதமாக சுட்டதில், சந்தீப் சிங் படுகாயமடைந்தார். இதனால் அவரது ஹாக்கி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மெல்லக் காயத்தில் இருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.