பெரிய ட்விஸ்ட்.. ஹரியானாவில் கவிழும் பாஜக ஆட்சி? சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவு!
சண்டிகர்: ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவியுள்ளனர். இதனால் ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 41 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், எச்எல்பி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து பாஜக ஆட்சியை பிடித்தது. சுயேச்சை எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக அரியணை ஏறியது. மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வந்தார்.
கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டார். புதிய முதல்வராக நவாப் சிங் சைனி பொறுப்பேற்றார். தற்போது 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதனால் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 88 ஆக உள்ளது. இதில் பாஜகவின் 40 எம்எல்ஏக்கள், எச்எல்பி மற்றும் 4 சுயேச்சை என மொத்தம் 4 5 பேரின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் தான் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளும் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
அதன்படி சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பீர் சங்வான், ரந்தீர் கொல்லன், தர்ரம்பால் கொண்டார் ஆகியோர் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்று காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். ரோடாக்கில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 3 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹுடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோருடன் சேர்ந்து இந்த தகவலை தெரிவித்தனர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் 9 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் போட்டியிடும் நிலையில் தற்போது விலகிய 3 சுயேச்சைகளும் ‛இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛நாங்கள் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கி உள்ளோம். இப்போது காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்க உள்ளோம். விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். முதல்வர் நயாப் சிங் சைனியின் அரசு தற்போது மைனாரிட்டி அரசாக உள்ளது. இதனால் அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவரால் ஒரு நிமிடம் கூட முதல்வராக நீடிக்க முடியாது'' என்றனர்.
ஹரியானாவில் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால் பாஜகவுக்கு 46 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் 42 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் அங்கு பாஜகவின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஹரியானாவுக்கு வரும் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிற சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தொடருமா? இல்லாவிட்டால் ஆட்சியை கவிழ்த்ததாக காங்கிரஸ் மீது குற்றம்சுமர்த்தி வரும் சட்டசபை தேர்தலில் அனுதாபம் தேடுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications