சிறையில் கிளார்க் பணி.. தினக்கூலியான மாஜி காங்., தலைவர் சித்து.. ஒருநாள் சம்பளம் இவ்வளவு தான்!
சண்டிகர்: சாலை விபத்து வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறையில் கிளார்க் பணி வழங்கப்பட்டுள்ளது. 3 மாத பயிற்சிக்கு பின் அவருக்கு தினசரி கூலியாக குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பாஜகவில் செயல்பட்டு வந்த இவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அமைச்சராக செயல்பட்ட நிலையில் அதன்பிறகு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
இந்நிலையில் பிப்ரவரி மாதம் பஞ்சாப் சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் நவ்ஜோத் சிங் தோல்வி அடைந்ததோடு, காங்கிரஸ் கட்சியும் ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
ஓராண்டு சிறை
இதற்கிடையே கடந்த 1988ம் ஆண்டு நவ்ஜோத் சிங் சித்து விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதில் குர்னாம்சிங் என்பவர் இறந்தார். இதுதொடர்பாக சித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சித்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் மே மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறையில் கிளார்க் பணி
இதையடுத்து மறுநாளான மே மாதம் 20ம் தேதி சித்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலைகள் வழங்கப்பட்டு வருவது போன்று சித்துவுக்கு கிளார்க் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் சிறை பதிவுகளை தொகுக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.
சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்காக அவருக்கு தினக்கூலியாக குறைந்தபட்சம் ரூ.40ம் அதிகபட்சமாக ரூ.90ம் வழங்கப்பட உள்ளது. முதல் 3 மாதம் பயிற்சி காலம் என்பதால் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது. அதன்பிறகு சம்பளம் வழங்கப்படும். இந்த சம்பளம் அவரது வங்கி கணக்கில் நேரிடையாக அனுப்பப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை அறையிலேயே பணி
மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த பணியை நவ்ஜோத் சிங் சித்து துவங்கி உள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணி செய்வார். இந்த பணிக்காக அவரது சிறை அறைக்கே ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை அறையை விட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதியில்லை. நவ்ஜோத் சிங் சித்துவின் செல்லை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 வார்டன்கள், 4 கைதிகள் சித்துவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.