மோடிக்கு மீண்டும் ஷாக் கொடுத்த பஞ்சாப்.. வெடித்து கிளம்பும் "கோ பேக் மோடி" குரல்கள்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், அவருக்கு எதிராக ''கோ பேக் மோடி'' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் பஞ்சாப்பில் பாஜகவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி
விவசாயிகள் போராட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி கடந்த மாதம் பஞ்சாப் வந்த நிலையில், போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதி வழியிலேயே பிரதமர் திரும்பிப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு, பஞ்சாபில் இன்று டிஜிட்டல் பிரசாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்கான ஏற்பாட்டை மாநில பாஜக செய்து வருகிறது.

கோ பேக் மோடி
பஞ்சாபில் பிரதமர் டிஜிட்டல் பிரசாரம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் பஞ்சாப் மக்கள். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 700 பேர் வரை இறந்திருக்கிறார்கள். அதன்பிறகு மத்திய அரசு விவசாய சட்டத்தை திரும்பப் பெற்றது.

மன்னிப்பு கேட்கணும்
பிரதமர் மோடி பஞ்சாப்பில் டிஜிட்டல் பிரசாரத்தை ஆறு இடங்களில் மேற்கொள்கிறார். பஞ்சாப் பிரதமரை வரவேற்கவில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதோடு, இன்றும் நாளையும் கோ பேக் மோடி முழக்கம் தொடரும் என்றும் அறிவித்துள்ளன. 700க்கும் அதிகமான விவசாயிகள் இறந்ததற்கு பிரதமர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாசகத்துடன் கோ பேக் மோடி என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஓட்டு வேணுமா
பஞ்சாப்பில் 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாத பிரதமர், இப்போது ஓட்டுக்காக பஞ்சாப் வருகிறார். முன்பு போல், பஞ்சாப் இப்போதும் உங்களைத் தோற்கடிக்கும் என்ற வாசகத்துடன் ட்வீட் செய்து வருகிறார்கள். நீங்கள் காலி சேர்களைத்தான் பார்க்கப் போகிறீர்கள் என்றும் ட்வீட் செய்கிறார்கள்.

ஆணி வைத்தீர்களே
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது எத்தனைத் தாக்குதல் நடத்தினீர்கள், அவர்கள் வந்த ட்ராக்டரை ஆணி வைத்து வரவேற்றீர்களே.. இப்போது உங்களை பூ தூவியா பஞ்சாப் வரவேற்கும் என்று வாசகத்துடன் கோ பேக் மோடி கோஷம் தொடர்ந்து பஞ்சப்பில் ஒலித்து வருகிறது.












Click it and Unblock the Notifications