'எங்க உயிரை ஏன் வாங்குறீங்க.. டெல்லிக்கு சென்று போராடுங்கள்'.. விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் ஆவேசம்
சண்டிகர்: விவசாயிகள் பஞ்சாப்பில் போராட்டம் நடத்துவதை கைவிட்டு டெல்லிக்கு சென்று பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை தோல்வி
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

பாஜகவுக்கு எதிர்ப்பு
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த மாநிலங்களில் தற்போது இருந்தே பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் , பஞ்சாப்பில் விவசாயிகள் அதிகம் இருப்பதால் இங்கு மட்டும் 113-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் போராட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக சார்பில் கூட்டமோ அல்லது விழாக்களோ நடந்தால் அங்கு முதல் ஆளாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க சென்று விடுகின்றனர். பஞ்சாப்பில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருவது மாநில அரசுக்கு கடும் எரிச்சலை எற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விவசாயிகள் மீதான அதிருப்தியை இன்று வெளிப்படையாகவே கொட்டி விட்டார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்.

முதல்வர் அமரீந்தர் சிங்
ஹோஷியார்பூர் மாவட்டம் முகிலியானா கிராமத்தில் ஒரு அரசு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், ' விவசாயிகள் பஞ்சாப்பில் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று மத்திய பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள். ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள். மாநிலத்தில் 113 இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள், அது எங்கள் வளர்ச்சியை பாதிக்கிறது. பஞ்சாபின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கிறது. எனவே டெல்லியில் சென்று போராடுங்கள்'' என்று பஞ்சாப் முதல்வர் கூறினார்.












Click it and Unblock the Notifications