தடுப்பூசி போடலியா.. பேங்க், ஹோட்டல் கூட போக முடியாது.. தடை போட்ட ஹரியானா அரசு
சண்டிகர்:தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலத்தில் உள்ள வங்கி, உணவகங்கள், கிளப்புகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அனுமதி கிடையாது என ஹரியானா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை பல்வேறு மாநிலங்களில், 550க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா அதைத் தொடர்ந்து டெல்லி , தெலங்கானா, பேரும், கர்நாடகா, குஜராத், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோர் கொரோனா மற்றும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.
பொதுவெளியில் கூட்டம் கூடுவதோ, கூட்டங்களிலோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் இரண்டாவது டோஸை போட்டுக்கொள்ளுங்கள் எனவும் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலத்தில் உள்ள வங்கி, உணவகங்கள், கிளப்புகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அனுமதி கிடையாது என ஹரியானா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நான்கு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் பிறப்பித்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாதவர்கள் பார்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் மதுக்கடைகள் போன்ற பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களிலும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே அத்தகைய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் இந்த உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படும் எனவும், உள்ளூர் சந்தைகள், மால்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் மற்றும் ஹோட்டல்களுக்குள் நுழைவதற்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுகுறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.