"அடுத்து என்ன பலாத்கார தினமா?" பாலியல் குற்றவாளியை வரவேற்ற பாஜகவினர்.. கொந்தளித்த திரிணாமுல் எம்பி
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியான சாமியார் குர்மித் ராம் ரஹீமை பாஜக தலைவர்கள் சந்தித்த விவகாரத்தில் திரிணாமுல் எம்பி கடுமையாகச் சாடியுள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக உள்ளவர் குர்மித் ராம் ரஹீம். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த குர்மித் ராம் ரஹீம் சாமியாருக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்த இரு மாநிலங்களில் மட்டும் பல லட்சம் பொதுமக்கள் குர்மித் ராம் ரஹீமை தீவிரமாக பின் தொடர்கிறார்கள். இவர் தன்னை புனிதமான சாமியார் என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.
பரோலில் வந்து பாலியல் தொல்லை.. இதான் “நன்னடத்தையா”? மோடி, அமித்ஷாவிடம் கேட்கும் மஹுவா மொய்த்ரா
தண்டனை
ஆனால், இவர் செய்த செயல்கள் எதுவும் புனிதமாகத் தெரியவில்லை. இவர் மீது ஏகப்பட்ட கிரிமினல் புகார்கள் உள்ளன. இவரை நம்பி ஆசிரமத்திற்குச் சென்ற இரு பெண் சீடர்களை இவர் பலாத்காரம் செய்ததாகப் புகார் உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2017இல் அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரது சீடர்கள் அங்கு மிகப் பெரிய அளவில் வன்முறை நடத்தினர். பலாத்கார வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பரோல்
அதேபோல மற்றொரு கொலை வழக்கிலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இவர் ஹரியானா ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், அவ்வப்போது இவருக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது. இப்படித்தான் கடந்த அக். 14இல் அவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், அக்.15ஆம் தேதி அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வரவேற்பு
சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாஜக நிர்வாகிகளும் கூட அவரை வரவேற்றனர். பலாத்காரம் மற்றும் கொலை தவிர மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட ஒருவரை ஆளும் கட்சியினரே சென்று வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் மிகக் கடுமையாக ஹரியானா பாஜக அரசைச் சாடி வருகின்றனர்.
கடும் தாக்கு
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராயும் பாஜகவைச் சாடியுள்ளார். அவர் தனது ட்விட்டரில், "அடுத்தது என்ன - "பலாத்கார தினத்தை" தேசிய விடுமுறையாக பாஜக அறிவிக்கப் போகிறதா? பலாத்கார குற்றவாளி ராம் ரஹீமுக்கு மீண்டும் பரோல் கிடைத்து உள்ளது. பாஜக ஹரியானா தலைவர்கள் அவரது ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
பாஜக தலைவர்கள்
பரோலில் வெளிவந்த ராம் ரஹீம் கடந்த அக்.18ஆம் தேதி ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவர் ஏராளமான மக்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உள்ளூர் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைவர்களில் ஒருவரான ரேனு பாலா குப்தா என்பவர் ராம் ரஹீமிடம், "உங்களுக்கான ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்" என்று கூறி இருந்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.
தேர்தல் வெற்றி
இதையும் சாடியுள்ள மஹுவா மொய்த்ரா, "பலாத்கார மற்றும் கொலைக் குற்றவாளி ராம் ரஹீமை "பிதாஜி" என்று அழைக்கும் பாஜக தலைவர், மக்களிடம் என்ன சொல்ல வருகிறார். பாஜக தேர்தலில் வெற்றி பெற இந்த நபர் தேவையா? அவர் ஆன்லைனில் என்ன சொல்லி தருகிறார்? பலாத்காரம் செய்வது எப்படி? கொலை செய்வது எப்படி? என்ற சொல்லித் தருகிறார்" என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மறுப்பு
பஞ்சாபின் அடம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும், ஹரியானாவில் உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் நடைபெற உள்ள நிலையில், குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் குர்மீத்திற்கு ஆதரவாகப் பல ஆதரவாளர்கள் உள்ளதால் இந்த பரோல் அரசியலாகி உள்ளது. அதேபோல "ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்" என்று பாஜகவின் ரேனு பாலா குப்தா கூறியதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அக்கட்சி விளக்கம் அளித்து உள்ளது.