"கரெண்ட்.." சிஎம் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் நீக்கம் ஏன் தெரியுமா? ராகுல் காந்தி பரபர விளக்கம்
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை நீக்கியதற்கான காரணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகினார்.
அதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் கேப்டன் அமரீந்தர் சிங். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல் காந்தி. இதனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியடைந்தார்.

அமரீந்தர் சிங்
இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், ''பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஒப்புக் கொள்ளாததால் தான் அவர் நீக்கப்பட்டார். மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் எனக்கு ஒப்பந்தம் உள்ளது, அதனால் இலவச மின்சாரம் வழங்க முடியாது என்று அமரீந்தர் சிங் தெரிவித்தார்'' என்று ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
அமரீந்தர் சிங் நீக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தியும் விளக்கம் கொடுத்துள்ளார். ''பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிலவியது. டெல்லியில் இருந்து பஞ்சாப் காங்கிரஸ் அரசை சில காலம் பாஜக இயக்கி வந்தது. இந்த ரகசிய கூட்டணி தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. அதனால் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டியதாகியது'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரனீத் கௌர்
கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கௌர். இவர் பாட்டியாலா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. இவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார். பாட்டியாலாவில் கணவருக்கு எதிராக பிரசாரம் செய்ய பிரனீத் கெளரை காங்கிரஸ் அழைத்தது. ஆனால், அவர் பிரசாரம் செய்ய மறுத்துவிட்டார். 'நான் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். குடும்பமே எல்லாவற்றிற்கும் மேலானது' என்று செய்தியாளர்களிடம் பிரனீத் கெளர் கூறியுள்ளார். விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தெரியவந்துள்ளது.











Click it and Unblock the Notifications