உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு...நிராகரிப்பு...அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: 10% இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்ததுக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா பங்கேற்றுள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நவ.19ல் வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்.. புயலாக மாறும்.. காரணம் என்ன? வெதர்மேன் விளக்கம்
முதல்வர் ஸ்டாலின்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையிலான கொள்கையை நிலைநாட்டவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூக நீதி கொள்கை என்றார்.
தீர்மானம் நிறைவேற்றம்
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் இறுதியில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது - இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப் பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.
அரசியல் சாசன அமர்வு
இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக்க மாட்டோம்
ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப் போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.
ஒருங்கிணைந்த நடவடிக்கை
சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.