100 நாள் வேலை என்பது வெட்டி வேலை.. தண்ட சம்பளம் அதை ஒழிக்கணும் - சீமான் அதிர்ச்சி
விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: 100 நாள் வேலை திட்டம் என்பது வெட்டியாக பலரும் சேர்ந்து புரணி பேசும் இடமாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பது தான் வெற்றி என்று கூறினார். அதற்கு மாறாக சமரசம் செய்து கொண்டு, அவரோடு இவரோடு சேர்ந்து கொண்டு வாக்குகளுக்கு காசு கொடுத்து பெறுவது வெற்றி கிடையாது என்றும் கூறினார்.
நாங்கள் அடுத்த தேர்தல் வெற்றியை எண்ணி நிற்கிறோம். நிரந்தரமான வெற்றியை தேடி போராடிக்கொண்டு இருக்கிறோம். வாக்கு சதவீதத்தின் படி வளர்ந்து கொண்டு தானே இருக்கிறோம். நாங்கள் சீட்டை பெற வரவில்லை, நாட்டை கைப்பற்ற வந்துள்ளோம் என்று கூறினார்.

லஞ்ச ஊழலற்ற ஆட்சி
தொடர்ந்து பேசிய சீமான், ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையும், நேர்மையுமாக தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் என்ன நிர்வாகம் செய்கிறீர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும். சின்ன பசங்களாகிய எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய சீமான், உள்ளாட்சி தேர்தலில் என் தம்பிகள், தங்கைகள் வெற்றிபெற்றால் ஊழலற்ற, லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை கிராமங்களில் தருவார்கள் என்று கூறினார்.

வெட்டி வேலை
வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டு குடிகளுக்கும் எதிரானது. விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்கு தனி பட்ஜெட். அதனால் பயன் என்ன வரப்போகிறது? அது ஏமாற்று தானே என்றும் சீமான் கேட்டுள்ளார்.

சீட்டாட்டம் பல்லாங்குழி
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது.எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக என்று கேட்ட சீமான், கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். புரணி பேசுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது.
Recommended Video

சோம்பேறிகளாகும் மக்கள்
இதற்கு தண்டமாக ஒரு சம்பளம். ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டில், மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றி வேடிக்கை பார்ப்பது என்ன அர்த்தம். நீங்க ஊதியமாக 100 ரூபாய், 200 ரூபாய் தரலாம். ஆனால், அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டைக்காய் எங்கிருந்து வரும். காசை பீய்த்து சாப்பிட முடியுமா. வறுமையை போக்க வேண்டும் என்றால் வேளாண்மை செய்ய வேண்டும் என்று கூறிய சீமான், பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மதுபான உற்பத்தி
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இன்று பனை விதைகளை நடுவோம், படித்த இளைஞர்களை முனைவர்களாக கொண்டு வருவோம் என்கிறார்கள். அன்று நாங்கள் சொல்லும் போது சிரித்தார்கள். இப்போ 'மேட் இன் தமிழ்நாடு' என்கிறார்கள். ஒரு குண்டூசியை கூட நாம உற்பத்தி பண்ணுவது கிடையாது. தயாரிப்பு முழுக்க மதுபானங்கள் தான். இந்தியாவே மேக் இன் திட்டத்தை தான் வைத்துள்ளது. இதை தான் நாங்கள் வாடகைத்தாய் பொருளாதாரக் கொள்கை என்கிறோம். அது தகர்க்கப்பட வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications