விடாத மழை..செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறப்பு..வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: விடாது பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மளமளவென நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டப்போகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக இருக்கிறது.

விடாது பெய்த கனமழை
செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 642 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி தற்போது 2850 மில்லியன் கன அடியாக உள்ளது.

நீர்மட்டம் 21 அடி
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21 அடிக்கு தண்ணீர் நிரம்பியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து 4வது நாளாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியை காண வரும் மக்கள்
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏரியில் நீர் வேகமாக நிரம்பி வருவதால், கடல் போல ஆர்ப்பரிக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து ஏராளமானோர் நேரில் பார்த்து செல்கின்றனர். செல்பி, புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

1000 கனஅடி நீர் வெளியேற்றம்
இதனிடையே ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஓரிரு நாட்களில் ஏரி நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த வாரம் முதல் விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று முதல் விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஏரியில் இருந்த அதிக அளவு உபரி நீர் அடையாற்றில் வெளியேற்றப்படுவதால் செம்பரம்பாக்கம் எரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுகளத்துர், காவனூர், குன்றத்துர் திருமுடிவாக்கம். வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்துள்ளார்.

நிரம்பிய ஏரிகள்
நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. புழல் ஏரியில் இருந்த தற்போது விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications