குரோம்பேட்டை எம்ஐடி, சரவணா ஸ்டோர்ஸை அடுத்து போத்தீஸிலும் பரவிய கொரோனா.. 13 ஊழியர்களுக்கு பாசிட்டிவ்!
சென்னை: சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால் அந்த கடையே மூடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் சுவர்ணமஹால் கடையில் பணியாற்றிய 30 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கடை மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,981 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் நாளை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. நகைக் கடை, துணிக் கடை, வணிக வளாகங்கள், தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஊரடங்கு விதிகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கடை மூடப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்
குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக இடத்தில் அவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் விடுதியில் தங்கி பணிபுரியும் 250 ஊழியர்களுக்கு நேற்று முன் தினம் தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பணியாற்றிய 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஒரு வாரம் கடைக்கு விடுமுறை
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி ஒரு வாரத்திற்கு கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்கச் சென்ற வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்குள் குரோம்பேட்டை போத்தீஸிலும் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

போத்தீஸ் நகைக் கடை
ஆம்! சென்னை குரோம்பேட்டையில் போத்தீஸ் சுவர்ணமகால் எனும் நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தக் கடையில் பணியாற்றிய 240 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

போத்தீஸ் கடை மூடல்
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் போத்தீஸ் கடையின் குரோம்பேட்டை கிளை மூடப்பட்டது. இது போல் அடுத்தடுத்து பெரிய கடைகளில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு பொருட்களை வாங்க சென்றிருந்த வாடிக்கையாளர்களை அதிர வைத்தது. குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி தொழில்நுட்ப கல்லூரியிலும் 120 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications