‘தீபாவளி ஸ்பெஷல்’ ரெய்டு.. பதறிப்போன ‘வசூல்’ அதிகாரிகள்.. அரசு அலுவலகங்களில் சிக்கிய 2 கோடி ரூபாய்!
சென்னை : தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 2 கோடி பணம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை, பத்திரப் பதிவுத் துறை, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்தச் சோதனையில் சுமார் 2 கோடி ரூபாய் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி சிறப்பு ‘வசூல்’
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தீபாவளி பரிசு என்ற பெயரில், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நேற்று மாலையில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.

ஒரே நேரத்தில்
கோவை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, செங்கல்பட்டு, நாமக்கல், நாகப்பட்டினம் என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டு நடைபெற்றது. கரூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம், வேலூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு கணக்கில் வராத ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பணம் கைப்பற்றப்பட்டது
இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த, கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றதிலும் பணம் கைப்பற்றப்பட்டது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் 2 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனைச் சாவடிகளில் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோதனைச் சாவடி, தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் போது ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ. 2 கோடி
இப்படியாக தமிழகம் முழுவதும் 46 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ. 2 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏராளமான பரிசுப் பொருட்கள், சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில், அரசு அலுவலகங்களில் நடைபெற்ற இந்த அதிரடி ரெய்டுகள், அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications