சென்னையில் தொடர் கனமழையால் பெண் உட்பட 2 பேர் பலி.. பெரும் சோகம்!
சென்னை : சென்னையில் கனமழைக்கு இருவர் பலியாகியுள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இடர்பாடுகளால் ஒரு பெண்மணி, ஆட்டோ டிரைவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை.. 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! எங்கெல்லாம் தெரியுமா? -ரிப்போர்ட்
சென்னையில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ மழை பெய்துள்ளது.
சாலைகளில் மழைநீர்
சென்னையில் பல இடங்களில், மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளதால், மழை நீர் உடனடியாக வடிந்தது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தொடர் மழையால் சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
பல பகுதிகளில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்றும், கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இருவர் பலி
சென்னையில் பெய்து வரும் கனமழையால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான தேவேந்திரன் என்பவர் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் மிதித்த தேவேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பால்கனி இடிந்து பெண் பலி
அதேபோல சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது தொடர் மழையின் காரணமாக ஈரத்தில் ஊறிய பால்கனி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய சாந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.