இதுவரை இல்லவே இல்லை! தாயுமானவர், தமிழ் புதல்வன்.. முத்தான இரு புதிய திட்டங்கள்! அசத்தும் தங்கம்!
சென்னை: தமிழக பட்ஜெட்டில் இரு புதிய முக்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் என அறிவிக்கப்பட்டதுமே அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற பெயரில் தமிழக அரசின் பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளதை அரசு நேற்று வெளியிட்டது.

அதில் சமூக நீதி, கடைக் கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவு சார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது உரையில் திருக்குறளை மேற்காட்டி தொடங்கினார். பிறகு எல்லோரும் அணுகக் கூடிய முதல்வராக தமிழக முதல்வர் இருக்கிறார் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை அவர் வாசித்தார். அவர் கூறுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க ரூ 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூந்தமல்லியில் ரூ 500 கோடியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். மருத்துவ கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ 333 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3ஆம் பாலினத்தவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் தோழி விடுதிகள் கட்டப்படுகிறது. அடையாறு நதியை மீட்டெடுக்க தனியார் பங்களிப்புடன் ரூ 1500 கோடியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும்
பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கு வரும் நிதியாண்டில் ரூ 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திரு்நதார்.
1. தாயுமானவன் வறுமை ஒழிப்பு: கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அத அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக் கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. இதற்கு தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
2. தமிழ் புதல்வன் திட்டம்- அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ரூ 1000 உதவித் தொகையின் மூலம் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை அவர்கள் வாங்கி கல்வியை மெருகேற்றிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications