புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் குவிக்கப்படும் 20,000 போலீஸ்.. ரேஸ் செல்பவர்களை தூக்க தனிப்படை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புப் பணிக்காக சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், பைக் ரேஸில் ஈடுபடுவர்களை பிடிப்பதற்காகவே ஏராளமான தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 500-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களைக்கட்டும் சென்னை
புத்தாண்டு தினம் வருவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் களைக்கட்டி வருகின்றன. என்னதான்.. தமிழகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், சென்னையில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தனிதான். மெரினா கடற்கரையிலும், ஏலியட்ஸ் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்பது பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். அதே சமயத்தில், மது அருந்திவிட்டு பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளுதல் போன்ற அசம்பாவிதங்களும் ஆங்காங்கே அரங்கேறும்.

20 ஆயிரம் போலீஸார் குவிப்பு
இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட சென்னை தயாராகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு முழுவீச்சில் கொண்டாட்டங்களுக்கு இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் போலீஸார் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள்?
புத்தாண்டு தினத்தில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.. அதேசமயத்தில், விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே எச்சரித்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் செலுத்துவது போன்ற விதிமீறல்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் 31-ம் தேதி மாலை முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரை மூடப்படவுள்ளன. இதுதவிர, மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை வழியாக ஈசிஆர் ரோடு வரை ரோந்துப் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபடவுள்ளனர். 500 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்படவுள்ளன.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள்..
அதேபோல, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என போலீஸார் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி பைக் ரேஸில் ஈடுபடுவர்களை பிடிக்க சென்னை முழுவதும் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காகவே 30 சாலை பாதுகாப்பு போலீஸ் குழுக்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இரவு முழுவதும் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வருவார்கள். அதேபோல, நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளங்களை மூடவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications