2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் - டாக்டர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் - மா.சுப்ரமணியன்
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வெர்ச்சுவல் மானிட்டர் முறையில் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார். ஓமிக்ரானால் பெரிய பாதிப்புகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம் என்று ம் மா.சுப்ரமணியன் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு
சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை, செங்கல்பட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கொரோனா தடுப்பூசி
சென்னை மாநகராட்சியில் 22 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 3.35 லட்சம் சிறார்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

2000 அம்மா மினி கிளினிக்
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன.அம்மா மினி கிளினிக்குகள் ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அம்மா மினி கிளினிக்குகளில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய 1820 மருத்துவர்கள் தற்போது கொரோனா பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மினி கிளினிக் தொடக்கம்
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 2000 கிளினிக்குகளில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களில் 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் செயல்பட்டு வந்தன. இந்த கிளினிக்குகள் காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளும் இந்த மினி கிளினிக்குகளில் போடப்பட்டு வந்தன.

ஊசி, மாத்திரைகள்
மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் நியமனம் செய்யப்பட்டனர். சளி, காய்ச்சல், உடல் வலி என வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டன.

தற்காலிகமாக மூடல்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரிக்கவே, அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

செயல்படாத மினி கிளினிக்
தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அம்மா மினி கிளினிக் திறப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவே இல்லை.
Recommended Video

1820 மருத்துவர்கள் பணியிடம்
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் செயல்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் நிரந்தரமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய 1820 மருத்துவர்களும் மார்ச் மாத இறுதி வரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பின்னர் அவர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications