2024 லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக யாருடன் கூட்டணி..அண்ணாமலை சொன்னது இதுதான்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்று இன்றே கூறியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அவர்கள் தலைமையில் தான் கூட்டணி என்றும் என்று தெரிவித்துள்ளார்.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரித்திர தீர்ப்பு எனவும் அதை தமிழ்நாடு பாஜக மனதார வரவேற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இந்த சட்டத்தை திமுக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும அண்ணாமலை கூறினார்.
பொருளாதார இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் இதில் திமுக, விஷமதனமான கருத்தை பரப்பி வருகிறது எனவும் தெரிவித்தார். இதில் 10% என்பது குறைவு என்றாலும் அதன் மூலம் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் காலத்தில் பேசலாம். இன்று இந்த தீர்ப்பை வரவேற்கலாம்.

ஆளுநரை திரும்ப பெற வேண்டுமா?
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற திமுக கருத்து அபத்தமானது , கீழ்த்தரமானது. அனைத்து எம்பிகளும் தங்களுக்கு அடிமை என காட்ட இவ்வாறு கூறுகின்றனர். தமிழகத்திற்கு விரோதமாக ஆளுநர் இருந்ததாக கூறுவது குறித்து திமுக ஆதாரபூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும். ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும்.

அதிமுக தலைமையில் கூட்டணி
எங்கள் கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி , என அவர்கள் தலைமையில் கூட்டணி என்பதில் தவறில்லை. கூட்டணியில் எந்த குழப்பம் கிடையாது , எடப்பாடி கருத்தில் தவறில்லை , ஒரே கூட்டணயில்தான் இருக்கிறோம் என்றும் அண்ணாமலை கூறினார். பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15 ம் தேதி , ஒன்றிய தலைநகரங்களில் 1200 இடங்களில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அண்ணாமலை கூறினார்.

டெபாசிட் இழப்பு
அமித் ஷா வருகை குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை , பிரதமர் வருகை உறுதி. அவருக்கு உற்சாக வரவேற்பு வழக்கப்படும் என்றார் அண்ணாமலை. நேற்று சட்டசபை இடைத் தேர்தல் முடிவு வெளியான 7 இடங்களில் காங்கிரஸ் கட்சி பல இடத்தில் டெபாசிட் பெறவில்லை.

2024 ல் முடிவுரை
2024 ல் பல கட்சிக்கு முடிவுரை எழுதப்படும் , எந்த கட்சி பலமானது என்ற உண்மை 2024 தேர்தலில் தெரியவரும். அருணாசலப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கியது , இலவச திட்டமல்ல. அது ஒரு நலத்திட்டம் என்றும் அண்ணாமலை கூறினார். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக பிடி கொடுக்காமல் பேசி வரும் நிலையில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று உறுதியாக கூறியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications