ட்விஸ்ட்.. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? நடிகர் கமல் சொன்ன பதில்.. பரபரப்பை கிளப்பும் மநீம
சென்னை: சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்? என்பது பற்றி கமல்ஹாசன் முக்கிய தகவலை கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகராக மாறி அரசியலில் நுழைந்த கமல்ஹாசன் கடந்த 2018 ல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கினார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலும், 2021 சட்டசபை தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டது.
இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்தது. கடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
இந்த தொடர் தோல்வியால் மக்கள் நீதி மய்யத்தின் சில நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவினர். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை குறைத்த கமல், சினிமாவில் தீவிரம் காட்டினார். அவ்வப்போது அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் கமல்ஹாசன் தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக கட்சி பணியை துவங்கி உள்ளார்.

சென்னையில் ஆலோசனை
அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி சென்னை அண்ணாநகர் தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி சார்பில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு, நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் சென்னையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினர்.

பல முக்கிய முடிவுகள்
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்சி கட்டமைப்பு, பூத் கமிட்டி, 2024 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி பேசப்பட்டன. ஒரு முக்கிய பயணத்துக்கான முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

கூட்டணி யாருடன்?
இந்த வேளையில் கூட்டணி தொடர்பாக ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‛‛இல்லை, அது உங்களுக்கு புரியவரும். எந்த திசையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியவரும். என் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது புரியும்'' என்றார். மேலும் தமிழகம் முழுவதும் பயணம் எப்போது செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‛‛வெகு விரைவில்.. ஒருவாரம், ஒன்றரை வாரத்தில் பயணம் செய்யப்படும். அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படும்'' என்றார்.

திமுகவுடன் கூட்டணியா?
இதுதவிர ஆவின் பொருட்கள் விலையேற்றம் பற்றிய கேள்விக்கு, ‛‛எந்த பொருளின் விலையையும் திடீரென்று ஏற்றம் செய்யக்கூடாது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்த கூடாது'' என்றார். தீபிகா படுகோனேன் ட்ரஸ் வைத்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு, ‛‛அது நம்ம அரசியல் இல்லை'' என கமல்ஹாசன் கூறினார். இந்த வேளையில் திமுக உடனனா கூட்டணி பற்றிய கேள்வி கேட்டபோது, ‛‛போதும்'' எனக்கூறி கமல்ஹாசன் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து புறப்பட்டு சென்றார்.

ராகுல் காந்தியின் யாத்திரை
இந்த பேட்டியின் கமல்ஹாசன் ஒரு முக்கிய பயணத்துக்கான முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் துணை தலைவர் மவுரியா பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛டிசம்பர் 24ல் டெல்லியில் நடக்கும் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் பங்கேற்க உள்ளார்'' என்ற தகவலை வெளியிட்டார்.

காங்கிரசுடன் புது கூட்டணியா?
இன்றைய பேட்டியில் கமல்ஹாசன் ‛எனது பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும் கூட்டணி பற்றிய விஷயம் புரியவரும்' என பத்திரிகையாளர்களிடம் கூறிய அடுத்த சில நிமிடங்களிலேயே பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம் ஆகியவை இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குகின்றனவா? என்ற கேள்வி அரசியல் களத்தில் றெக்கை கட்டி பறக்க துவங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications