வாங்க.. வாங்க.. கைலாசாவில் 25,000 வேலைவாய்ப்பு.. நித்யானந்தா கொடுத்த அடடே ஆபர்.. பரவும் போஸ்டர்!
சென்னை: நித்யானந்தாவின் கைலாசாவில் நாட்டில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் இதற்காக தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், இலவச உணவு உள்பட பல்வேறு ஆபர்கள் இடம்பெற்ற போஸ்டர் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நித்யானந்தா.. தமிழகத்தை சேர்ந்த இவர் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்தனர்.
இந்நிலையில் தான் நித்யானந்தா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். மேலும் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குகள் பதிவானது.
எனக்கு இன்னொரு பேர் இருக்கு! நித்யானந்தாவின் உண்மைப் பெயர் இதுதானா? இணையத்தில் வைரலாகும் பர்த் டே!
ஓட்டம் பிடித்த நித்யானந்தா
மேலும் பல்வேறு விஷயங்களில் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் நித்யானந்தா திடீரென்று மாயமாகி உள்ளார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நேபாளத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் உண்மை நிலை என்ன என்று தெரியாத நிலையில் தான் அவர் தொடர்பான விஷயங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.
கைலாசா தனிநாடு
அந்த வகையில் தான் சமீபத்தில் நித்யானந்தா கைலாசா எனும் ஒரு தீவை வாங்கியதாத கூறப்பட்டது. மேலும் தனிநாடு, தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போன்றும், கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் போலவும், இந்துக்களுக்கானது தான் இந்த கைலாசா என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதுதொடர்பான மீம்கள் தொடர்ந்து இணையதளங்களில் டிரெண்ட் செய்யப்படும். மேலும் பல இளைஞர்குளும் கைலாசா செல்ல உள்ளதாக வேடிக்கையாக இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாசாவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்ற போஸ்டர் வெளியானது. இதன் தொடர்ச்சியாக கூடுதல் ஆபர்களுடன் தற்போது இணையதளத்தில் ஒரு போஸ்டர் வேகமாக பரவி வருகிறது. அதில் மொத்தம் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வி, மனித சேவைகள், சுகாதாரம், மதம் மற்றும் வழிபாட்ட தலங்கள், தகவல் மற்றும் ஒளிரப்பு, வேளாண்மை அமைச்சகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பயிற்சி
இந்த பணிகளுக்கு தகுதிகளாக மெக்காலே கல்வி திட்ட சான்றிதழ்கள் தேவையில்லை எனவும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டு கால பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும், இந்தியாவில் உள்ள பெங்களூர், திருவண்ணாமலை, காசி, சேலம், ஹைதராபாத் மற்றும் பிற கைலாசங்களில் பயிற்சி வழங்கப்படும் எனவும், ஓராண்டு கால பயிற்சிக்கு பிறகு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதிக்கேற்ப உலக அளவில் இருக்கும் கைலாசங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இலவச உணவு -மருத்துவ பாதுகாப்பு
மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களகு்கு இலவச உணவு, இலவச மருத்துவ பாதுகாப்பு, குழந்தைகளுக்கான இலவச குருகுல இந்து கல்வி எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த போஸ்டரில் உள்ள க்யூஆர் கோடு வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நித்யானந்தாவையும், கைலாசாவையும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.