25 போதுமா, இன்னும் வேணுமா.. முற்றும் மோதலை நிறுத்த ராகுலை சந்திக்கிறார் கனிமொழி! பிப் 3ல் திமுக செக்
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை வேகப்படுத்தியுள்ளன... அந்தவகையில் திமுகவும் தன்னுடைய வேகத்தை கூட்டி உள்ளது.. இன்றைய தினம் ராகுல் காந்தியை, திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசி வருகிறார். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி பரபரப்பு அதிகரித்துள்ளது..
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

இந்த முறை ஆளுங்கட்சியான திமுக கடந்த தேர்தலை விட கூடுதல் பலத்துடன் களம் இறங்குகிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது.
திமுக தேர்தல் பேச்சு
இதுதவிர பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தரப்பில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன... ஆனால், கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் தங்களுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளன. அதிலும் கூடுதல் தொகுதிகள் என்பதைவிட, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பதவி என்று காங்கிரஸ் சற்று கறாராகவே நிற்கிறது..
காங்கிரஸ் - திமுக கூட்டணி
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை..
"திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை.. திமுகவின் பதிலுக்கு 2 மாதங்களாக காத்திருக்கிறோம், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை" என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்றைய தினம் வெளிப்படையாகவே கூறியிருந்தார்..
ராகுல் காந்தி - கனிமொழி இன்று சந்திப்பு
காங்கிரஸ் இப்படி ஓபனாக புலம்ப துவங்கியிருக்கும் இந்த சூழலில்தான், திமுகவின் . துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..
கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தைக்காகக் காத்திருப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், கனிமொழியின் இந்தச் சந்திப்பு தொகுதி பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது...
திமுகவின் தேர்தல் உத்திகள் குறித்து வெளியான தகவலின்படி, பிப்ரவரி 3ம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இன்று கனிமொழி டெல்லி பயணம்
இதற்காக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழுவை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். கடந்த 2021 தேர்தலின்போது திமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டது.. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 சீட் பெற்றிருந்தது.. இந்த முறையும் அதே போன்றதொரு நிலையைத் தக்கவைக்க திமுக விரும்பினாலும், கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களை கோரி வருவதால் பேச்சுவார்த்தையில் ட்விஸ்ட்கள் நிறைய வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன...
பிப்ரவரி 3-க்கு பிறகு திமுக தரப்பு அதிகாரப்பூர்வமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிகளிடம் நடத்தும் என்றாலும், இன்றைய தினம் ராகுல் காந்தியை கனிமொழி டெல்லியில் சந்தித்துள்ளது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications