30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.. மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை
மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் உடல் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் காவல் துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வாணி ஜெயராம். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தி்ல வசித்து வந்தார்.
பிரபல பாடகியான வாணி ஜெயராமுக்கு வயது 78.
தமிழ் உள்பட மொத்தம் 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடினார். இனிமையான குரல் உணர்ச்சிகரமான வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்டவற்றால் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வாணி ஜெயராம்.
19 மொழியில் 10,000 பாடல்.. வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..உருக்கமாக இரங்கல்
காலமான வாணி ஜெயராம்
இந்நிலையில் தான் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் அவர் மறைந்தார். வீட்டு படுக்கையில் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராமின் நெற்றியில் காயம் இருந்தது. இதையடுத்து அவரின் உடலை உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரணம் என்ன?
இந்நிலையில் தான் உடற்கூராய்வு முடிவடைந்த நிலையில் அதில் முக்கிய தகவல் வெளியானது. படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்த நிலையில் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டது. நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதுதான் அவரது மரணத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டுக்குள் யாரும் செல்லவில்லை எனவும், இதில் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த வாணி ஜெயராம் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர் என் ரவி நேற்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
30 குண்டுகள் முழங்க..
முன்னதாக தான் வாணி ஜெயராமின் புகழை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவரது உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் போலீசார் இந்த மரியாதையை செய்தனர்.
விருதுகள் என்னென்ன?
வாணி ஜெயராம் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் அவர் பல மாநிலங்களின் விருதுகளை அவர் பெற்றுள்ளார். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.