கீழே விழுந்த பை.. உள்ளே பார்த்தால் "வெடிகுண்டு ஃபார்முலா!" 3 பேரை விரட்டி பிடித்த சென்னை போலீஸ்! ஐயோ
சென்னை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், சென்னையில் வெடிகுண்டு ஃபார்முலாவுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறியுள்ள போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சென்னை மற்றும் புறநகர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனை.. வசமாக சிக்கிய பாஜக இளைஞரணி நிர்வாகி! கோவையில் பரபரப்பு
தமிழகத்தை உலுக்கிய கார் வெடிப்பு
கோவையில் உள்ள உக்கடம் பகுதியில் கடந்த மாதம் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த காரை ஓட்டிச் சென்ற ஜமோசா முபின் என்பவர் பலியான நிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முபினின் உறவினர்கள், நண்பர்கள் என 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிரடி சோதனைகளை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், இந்த கார் வெடிப்பு சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் சதி என அண்மையில் அறிவித்தது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு
கோவை சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் பலருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் அளித்தது. இதன்பேரில், அந்தப் பட்டியலில் உள்ள 102 பேரிடம் காவல்துறையினர் அண்மையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெடிகுண்டு ஃபார்முலா
இந்த சூழலில், சென்னையில் கடந்த சில நாட்களாக போலீஸார் இரவு வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு ராயபுரம் கல் மண்டபத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாரை தள்ளிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் அவர்கள் வைத்திருந்த தோள் பை கீழே விழுந்துள்ளது. அதை எடுத்து போலீஸார் பார்த்த போது, அந்த நோட்டு முழுவதும் வெடிகுண்டுகளை எப்படி தயாரிப்பது என்ற ஃபார்முலா (சூத்திரம்) எழுதப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
தீவிரவாதிகளுடன் தொடர்பா?
இதையடுத்து, போலீஸார் அந்த மூவரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் புதுவினோபா நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன், நவாஸ், நாகூர் மீரான் என்பதும், சென்னை பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடைகளில் அவர்கள் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.