"விசுவாசமாக இருந்தோம், எடப்பாடியார் ஏமாற்றி விட்டாரே'' புலம்பி தவிக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை: சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கூட்டணி அல்வா கொடுத்துள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாய்ப்பு கிடைக்காத சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மீது தங்கள் அதிருப்தியை, கோபத்தை வெளியிட்டு வருகிறார்களாம்.
அமைச்சர்களில் குறிப்பிட்ட சிலர் மீது மக்கள் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களை ஓரம்கட்டி விட்டு, விசுவாசமான சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்சிகளுக்கு தொகுதி செட்டில் செய்த அதிமுக
தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணி வெற்றிகரமாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகளையும், பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் செட்டில் செய்து விட்டது. தமிழ் மாநில காங்கிரசுக்கு மட்டும் இன்னும் பாக்கியுள்ளது. அந்த கட்சிக்கும் அதிமுக விரைவில் சீட் செட்டில் செய்து விடும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

41 எம்.எல்.ஏ.க்களுக்கு அல்வா
அதிமுக இதுவரை 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் 30 அமைச்சர்களில் எஸ்.வளர்மதி, பாஸ்கரன், நிலோபர் கபீல் ஆகிய 3 பேரைத் தவிர 27 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கூட்டணி அல்வா கொடுத்துள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொங்கு மண்டலத்தில் நிறைய பேர்
இந்த 41 பேரில் பலர் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள். சேலம் சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் 7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கைகழுவி விட்டதால் இந்த 41 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக தலைமை மீது கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ''கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருந்த நம்மை இப்படி ஏமாற்றி விட்டார்களே'' என்று அவர்கள் புலம்பி தவிக்கிறார்களாம்.

விசுவாசமாக இருந்தோம்; ஏமாற்றி விட்டார்
''கட்சிக்கும் ஆட்சிக்கும் மட்டுமல்ல, எடப்பாடியாருக்கும் விசுவாசமாக இருந்தேன். எம்.எல்.ஏ-வாக பணியைச் சிறப்பாகச் செய்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தமாக இருக்கிறது'' என்று கெங்கவல்லி தொகுதி மருதமுத்து கூறியுள்ளார். ''முதல்வர் எடப்பாடியாருக்கு கோவில் கட்டி எனது விசுவாசத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் கோவில் கட்டிய எனக்கு அவர் நாமத்தைப் போட்டுட்டார் என்று விரக்தியுடன் கூறுகிறார் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்தம்பி.

வேறு அணிக்கு தாவ முடிவு
இதேபோல் வாய்ப்பு கிடைக்காத பலரும் முதல்வர் மீது தங்கள் அதிருப்தியை, கோபத்தை வெளியிட்டு வருகிறார்களாம். இந்த விரக்தியால்தான் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். இதேபோல் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்களில் குறிப்பிட்ட சிலர் மீது மக்கள் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களை ஓரம்கட்டி விட்டு, விசுவசமான சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications