கொரோனா தலைநகரான சென்னை.. இந்த 5 முக்கிய காரணிகள்தான் காரணம்
சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் சென்னையில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் கொரோனா அதிகரிக்க 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அவை கோயம்பேடு மார்க்கெட், லாக்டவுனுக்குள் லாக்டவுன், கிளஸ்டர்கள், சென்னையில் நோய் அறிகுறி இல்லாதோரின் எண்ணிக்கை உயர்வு, சென்னை முழுவதும் தீவிர கொரோனா சோதனை ஆகிய 5 காரணிகள்தான்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் உள்பட ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பரவியதாக தகவல்
பிரபல கோயம்பேடு மார்க்கெட்
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 3000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த இடம்தான் தற்போது நோய் பரப்பும் மையமாக மாறிவிட்டது. சென்னையில் நேற்று பதிவான 266 கேஸ்களில் 215 பேர் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மிகப் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு பெரிய கிளஸ்டராக மாறிவிட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கும் கொரோனா ஏற்பட்டதால் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யும் பணி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க கோயம்பேடு சந்தையே காரணமாக இருப்பதால் இந்த இடம் மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
பேனிக் பையிங்
நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கடந்த ஏப்ரல் 26 முதல் 29ஆம்தேதி வரை லாக்டவுனுக்குள் ஒரு லாக்டவுன் போடப்பட்டது. அதாவது கொரோனா அதிகம் பரவுவதை தடுக்க சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் போது காய்கறி, மளிகை கடைகள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பால் ஏப்ரல் 25-ஆம் தேதியே மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதினர். 4 நாட்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் குவித்தனர். ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக கூடியதாலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகமானது.
திணறும் சென்னை
சென்னையில் கொரோனா வைரஸை எதிர்கொள்வது பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் ஏராளமான கிளஸ்டர்கள் உருவெடுத்ததுதான். அதாவது கோயம்பேடு மார்க்கெட், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி, சென்னை திருவிக நகரில் அப்பகுதியினர் நடத்திய பிரார்த்தனை நிகழ்ச்சி, பத்திரிகையாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்தது ஆகியவை ஆகும். அது போல் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களும் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அடங்குவர்.
நோய் அறிகுறி இல்லாதோர்
சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பரவியது. இது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் வீடுதோறும் நோய் பாதிப்பை கண்டறிய சென்னை மாநகராட்சி வியூகம் வகுத்துள்ளது. இதன் மூலம் சமூக பரவல் தடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதித்தோர் கண்டுபிடிக்கப்படுவர்.
தீவிரமாகும் சோதனை
சென்னையில் நாள்தோறும் கொரோனா சோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது போல் நிறைய பேருக்கு சோதனை செய்யப்படுவதால் மே 1 ஆம் தேதி முதல் 10 லட்சம் பேரில் 5,225 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. எனவே சோதனைகள் அதிகரிப்பால் பாதிப்புகளும் அதிகரிப்பதில் அச்சமடைய தேவையில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.