சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில்.. கால் தவறி கீழே விழுந்த சிலிண்டர் டெலிவரி மேன்.. பரிதாப பலி
சென்னை : சென்னையில் தனியார் கேஸ் ஏஜென்சியில் டெலிவரி மேனாக பணிபுரிந்துவரும் ஊழியர் கால் தவறி கீழே விழுந்ததில் சிலிண்டரில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சிலிண்டர் டெலிவரி செய்ய சென்றபோது மாடிப்படியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
படியில் தவறி விழுந்தபோது சிலிண்டரும் அவர் மீது விழுந்ததால் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன்
சென்னை கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். பாரத் தெருவில் வசித்து வரும் 52 வயதான பிரான்சிஸ் தனியார் எரிவாயு விநியோகம் ஏஜென்சியில் டெலிவரி மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நவம்பர் 26ம் தேதி பணிக்கு சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு
காலையில் எரிவாயு கிடங்கில் இருந்து சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கம் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் பெரும்பாக்கம் நேசமணி நகரிலும் வழக்கம்போல் ஒவ்வொரு வீடாக சென்று சிலிண்டர் டெலிவரி செய்து கொண்டிருந்தார். பின்னர் அடுக்கு மாடி குடியிருப்புக்குள் செல்வதற்காக சிலிண்டர் ஏற்றிச் சென்ற சைக்கிளை குடியிருப்பு வாயிலில் விட்டுவிட்டு மாடிப் படியேறினார். மாடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு சிலிண்டரை எடுத்துக்கொண்டு படியேறிக்கொண்டிருந்தார்.
சிலிண்டருடன் படிக்கட்டில் விழுந்தார்
அப்போது படிக்கட்டுகளில் கால் இடறி உள்ளது. தனது தோள்பட்டையில் சுமார் 30 கிலோ எடையுள்ள சிலிண்டரை தூக்கிச் சென்ற பிரான்சிஸ், திடீரென கால் இடறியதால் சமாளிக்க முடியாமல் படிகட்டுகளில் விழுந்துள்ளார். பிரான்சிஸ் படிக்கட்டுகளில் விழுந்த அடுத்த கணத்திலேயே அவர் தூக்கிச் சென்ற சிலிண்டரும் உருண்டுவந்து அவர் மீது விழுந்துள்ளது. இதனால் பிரான்சிஸின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி பலி
இதை அடுத்து மீட்கப்பட்ட பிரான்சிஸ் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறுநாள் மருத்துவமனையில் பரிதாபமாக பிரான்சிஸ் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.