மக்கள் மருத்துவர் 60 பைசா டாக்டர் பார்த்தசாரதி மரணம் - கண்ணீர் விட்டு கதறிய வடசென்னை மக்கள்
60 பைசா டாக்டர் என்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றினால் காலமானார். அவருக்கு வயது 84.
சென்னை: வட சென்னையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏழை ,எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் பார்த்தசாரதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 84. மக்கள் மருத்துவரின் மரணத்தை அறிந்து வண்ணாரப்பேட்டை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், வண்ணாரப்பேட்டை பகுதியில் தமது இல்லத்திலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்து, ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி, கால மாற்றத்திற்கு ஏற்ப சொற்ப அளவிலான கட்டணத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்தார். அவர் அதிகம் கட்டணம் வாங்கியதே 50 ரூபாய்தான்.
அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் சென்று மருத்துவம் படித்து வந்த பார்த்தசாரதி சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறை மக்களுக்கு சேவை புரிந்து வந்தார். ஏழை எளியவர்களுக்கு வசதியாக ஆரம்ப காலத்தில் அவர் நிர்ணயித்த மருத்துவக் கட்டணம் தான் 60 பைசா. அதனாலேயே அவர் 60 பைசா டாக்டர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
பலருக்கும் இலவசமாகவே மருத்துவம் பார்த்துள்ளார்.
நாளடைவில் கால மாற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தினாலும் பணம் இல்லாதவர்களுக்கு எதையும் கேட்காமல் மருத்துவம் செய்து வந்தார். ஆரம்ப கட்டத்தில் 2 ரூபாய், பிறகு 3 ரூபாயில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். பின்னர், 5 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்தார். பள்ளி சீருடையில் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்து வந்தார்.
உயிரையும் துச்சமென மதித்து சேவை செய்யும் மருத்துவர்கள் தான் கடவுள்கள் - டாக்டர் ராமதாஸ்
மருத்துவ மக்கள் மருத்துவரான பார்த்தசாரதிக்கு கடந்த வாரம் திடீரென ஒரு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே தனிமையில் இருந்து வந்தார். தனிமையில் இருந்து வந்த அவருக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மக்கள் மருத்துவரின் உடல் காசிமேடு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மருத்துவர் பார்த்தசாரதி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் என்பதால் வடசென்னையில் உள்ள பெரும்பாலானோர் அவரிடம் சிகிச்சைக்காக வந்து செல்வர். பரம ஏழைகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாகவும் சிகிச்சையளித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா நோயாளிகள் பலருக்கும் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளார். மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் மருத்துவர்கள் அடுத்தடுத்து மரணமடைவது சென்னை வாசிகளை கவலையடைய வைத்துள்ளது.