இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்.. 73.27% வாக்குகள் பதிவு.. இந்த மாவட்டத்தில்தான் மிக குறைவு!
சென்னை: 9 மாவட்டங்களில் நடந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12-ம் தேதி எண்ணப்படுகின்றன .
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

உள்ளாட்சித்தேர்தல்
அதன்படி 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்தனர். முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இரண்டாம் கட்ட தேர்தல்
இந்த நிலையில் ஏற்கனேவே அறிவிக்கப்பட்டபடி 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் இன்று நடைபெற்றது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

போலீஸ் பாதுகாப்பு
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் நின்று வாக்களித்தனர். இதேபோல் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுபெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது. ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

73.27% வாக்குகள் பதிவு
இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் 73.27% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 83.6% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 82% வாக்குகள் பதிவாகி உள்ளன. காஞ்சிபுரத்தில் 72%,
செங்கல்பட்டில் 70%, வேலூரில் 68% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராணிப்பேட்டையில் 75.3%, திருப்பத்தூரில் 73.5%, தென்காசியில் 70% வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 65% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 12-ம் தேதி எண்ணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications