தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 76% கூடுதல் மழை..சென்னைதான் டாப்.. வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வழக்கத்தை விட ஜூன் மாதத்தில் 76% கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம், புதுவையில் 74.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 166 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோடைக்காலம் அல்லது தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் மொத்த வருடாந்தர மழைப்பொழிவில் 70% பங்கை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% பங்கை வகிக்கும் வேளாண் பொருளாதாரத்துக்கு இது மிகவும் முக்கியமாகும்.
இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் பருவகால மழைப்பொழிவு 870 மி.மீ என்றும் 1961 - 2010 வரைக்குமான நீண்ட கால சராசரி (எல்.பி.ஏ) மழைப் பொழிவு 880 மி.மீ என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி செய்தி குறிப்பு கூறுகிறது.
நடப்பாண்டு கோடை காலத்திலும் மழை கொட்டித்தீர்த்தது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம், புதுவையில் 74.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 166 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் சென்னையில் அதிக அளவில் பருவமழை கொட்டித்தீர்க்கும். நடப்பாண்டு ஜூன் மாதத்திலேயே சென்னையில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
ராணிப்பேட்டை 156.3 மி.மீ. திருப்பத்தூரில் 137.9 மி.மீ, நீலகிரி 132.4 மி.மீ., திருவள்ளூரில் 119.1.மி.மீ., பெரம்பலூரில் 118.3 மி.மீ., வேலூரில் 116.2 மி.மீ., கிருஷ்ணகிரி 114.3 மி.மீ, சிவகங்கையில் 111 மி.மீ, சேலத்தில் 104.7 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது. இந்த நேரத்தில் இயல்பாக 42.3 மி.மீட்டர் தான் மழை பெய்யும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் 76% அதிக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது.
இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தெற்குமேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 முதல் 104 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது என கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் பரவலாக மழை மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூலை எட்டாம் தேதியில் பரவலாக மழைப்பொழிவு கிடைக்கும் நிலையில் நடப்பாண்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கிடைக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.