9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி வார்டு கவுன்சிலர் தொடங்கி மாவட்ட கவுன்சிலர் வரையிலான பல்வேறு பதவியிடங்களுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இதனிடையே செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்றது, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்நிலையில் பதவி வாரியாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் விவரம் பின்வருமாறு;
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி -15,967 பேர் வேட்புமனுத் தாக்கல்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் -72,027 பேர் வேட்புமனுத் தாக்கல்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122 பேர் வேட்புமனுத் தாக்கல்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671 பேர் வேட்புமனுத் தாக்கல்
இதனிடையே வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள செப்டம்பர் 25-ம் தேதியே கடைசி நாளாகும். 9 மாவட்டங்களிலும் பரவலாக பார்க்கும் போது தேர்தலில் போட்டியிட அதிகமானோர் ஆர்வம் காட்டியிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக படித்த இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகளவில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
வரும் சனிக்கிழமை முதல் மேற்கண்ட 9 மாவட்டங்களிலும் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications