400 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை.. காஞ்சிபுரத்தில் அதிரடியாக மீட்ட சுங்கத் துறை
சென்னை: காஞ்சிபுரத்தில் 400 ஆண்டு பழமையான விநாயகர் சிலை மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த நிலையில் சுங்கத்துறையினர் மீட்டனர்.
வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 ஆண்டு பழமையான 5.25 அடி உயர நடனமாடும் வடிவில் உள்ள ரித்திய கணபதி சிலையை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அதிரடி சோதனை நடத்தி மீட்டுள்ளனர்.
சோதனை நடத்திய வீட்டுக்குள் 130 கிலோ எடையுள்ள 5.25 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை இருந்துள்ளது. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு விநாயகர் சிலையை கடத்திச் சென்று, பின்னர், அங்கிருந்து வெளிநாட்டிற்கு அந்த சிலையை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக நேற்று, சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் எஸ்போஷிசன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தில், தொன்மையான சிலைகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, தொன்மையான ஐம்பொன் சிவன் சிலை ஒன்றும், 15 விற்பனை ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சாவூர் கீழராஜ வீதியில், சாஹா டிபார்மென்டல் ஸ்டோர் என்ற பெயரில் இதற்கு, கிளை நிறுவனம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, அந்த நிறுவனத்தில், திருச்சி சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான போலீசார் சோதனை செய்து விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, எட்டு கை விஷ்ணு சிலை உட்பட இரண்டு சிலைகளை கைப்பற்றினர்.
இவை இரண்டுமே, கிழக்காசிய நாட்டு கோவில்களில் காணப்படும் உற்சவர் சிலைகள். இந்த சிலைகளை, சென்னையில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் போலீசார் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட சிவன் சிலை 50 கோடி, இரண்டு விஷ்ணு சிலைகள் தலா 30 கோடி என்றும் 60 கோடி ரூபாய்க்கு விற்க, அவர்கள் விலை பேசியதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications