எல்லை மீறிய பெண் இன்ஸ்பெக்டர்.. தற்கொலைக்கு முயன்ற காவலர் கஜலட்சுமி.. பரபரப்பான திருப்போரூர்!
சென்னை: திருப்போரூர் பெண் இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் பெண் காவலர் கஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் கஜலட்சுமி (23) என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரின் சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டமாகும். கஜலட்சுமியின் தாய்-தந்தை இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகாத வார்தையால் திட்டினார்
திருப்போரூர் போலீஸ் பெண் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார் கஜலட்சுமி. திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, கடந்த சில மாதங்களாகவே கஜலட்சுமியை தொடர்ந்து மனரீதியாக கடும் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த பெண் காவலர் கஜலட்சுமியை, இன்ஸபெக்டர் கலைச்செல்வி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
பூச்சி மருந்து குடித்தார்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கஜலட்சுமி, பணி முடித்துவிட்டு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்து குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கலைச்செல்வியின் அராஜகம்
பெண் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தொடர்ச்சியாக உதவி ஆய்வாளர்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு கொடுப்பது, காவலர்களை மிரட்டுவது காவல் நிலையம் தன் கட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று அராஜக முறையில் செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சிலர் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரிக்கணும்
இதேபோல் கொரோனா நேரத்தில் பார் உரிமையாளர்களை கையில் வைத்து கொண்டு கூடுதலாக மது விற்பனை செய்ய உடந்தையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி எழுந்துள்ளது. எனவே இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று சக காவலர்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.