கள்ளக்காதல்.. ஒரு பெண்.. 3 பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்றவருக்கு 4 ஆயுள் தண்டனை.. மகளிர் நீதிமன்றம்
சென்னை: பெண்ணையும், மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராயப்பேட்டை முத்து தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். கணவரைப் பிரிந்து, தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருடன் தொடர்பில் இருந்த சின்னராஜ், பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததால் சின்னராஜுடனான தொடர்பை பாண்டியம்மாள் துண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், சின்னராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, சின்னராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகள் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார்.